ஐபிஎல் போட்டி போல மாறிய அமெரிக்க அதிபர் தேர்தல்.. ரிசல்ட் வெளியாக ஏன் தாமதம்? பின்னணி இதுதான்
வாஷிங்டன்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிரா ஆனால் எப்படி இருக்குமோ அந்த மனநிலையில் அமெரிக்க தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மனநிலை இருக்கிறது.
நேற்று முதலே, அமெரிக்க அதிபராக யார் வரப் போகிறார்கள் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேர்தல் முடிவு பட்டியல், நகர மாட்டேன் என்று இருந்த இடத்திலேயே அடம் பிடிக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகளை புதிதாக பார்க்கும் பலருக்கும் ஏன் இப்படி நடக்கிறது என்ற ஐயப்பாடும், பொறுமையின்மை ஏற்படத்தான் செய்யும். ஆனால் அமெரிக்க தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள நடைமுறையை ஒத்து இருக்காது என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு இது பெரிய ஆச்சரியம் கிடையாது.

தாமதத்துக்கான காரணங்கள்
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாகாணங்களுக்கும் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை தான் ஓட்டு எண்ணிக்கை. குறைந்தபட்சம் 270 ஓட்டுக்களை பெறுவோர் அதிபராக முடியும். ஆனால் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் ஒவ்வொரு வகையான தேர்தல் நடைமுறைகளும், சட்டங்களும் இருக்கின்றன என்பதுதான் இந்த தாமதத்திற்கு அடிப்படை காரணம்.

மெயில் ஓட்டுக்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் பல கோடி அமெரிக்க வாக்காளர்கள் மெயில் மூலம் வாக்குகளை செலுத்தியுள்ளனர். பொதுவாகவே மெயில் வாக்குகளை எண்ணுவதற்கு காலம் பிடிக்கும். அதிலும் அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையே உள்ள நடைமுறை வேறுபாடுகள் இந்த கால நேரத்தை இன்னும் நீடிக்கின்றனர்.

இரு வகை மாகாணங்கள்
மெயில் வாக்குகளை பிரித்து பார்க்க வேண்டும், தவறுகள் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும், அதை சரி செய்து விட்டு ஸ்கேன் செய்ய வேண்டும், இதற்கெல்லாம் கால நேரம் தேவைப்படுகிறது. மெயில் மூலம் வாக்களிக்கும் நடைமுறையில் அனுபவம் கொண்ட மாகாணங்களும் அனுபவமில்லாத மாகாணங்களும் என அங்கு இரு வகையான மாகாணங்கள் இருக்கின்றன. அனுபவம் கொண்ட மாகாணங்கள் சில வாரங்களுக்கு முன்பே மெயில் வாக்கு எண்ணும் பணியை தொடங்கி விட்டன. எனவே, அங்கு தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகின.

மாகாண சட்டங்கள்
இன்னும் பல மாகாணங்களில் அதுபோன்ற நடைமுறைகளில் அனுபவம் கிடையாது. அதற்கேற்ற கருவிகள் பொருத்தப்படவில்லை. அது மட்டும் கிடையாது. இவ்வாறு முன்கூட்டியே வாக்குகளை எண்ணுவதற்கு அந்த மாகாணங்களின் சட்டங்கள் அனுமதிப்பதும் கிடையாது. இப்படித்தான் வாக்கு எண்ணிக்கை தாமதமாகும் என்பது தேர்தலுக்கு முன்பாகவே பலராலும் யூகிக்கப்பட்டதுதான். தற்போது அதே போல தான் நடக்கிறது.

வெள்ளிக்கிழமை
எனவே பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களின் முழு ரிசல்ட் வெளியாகி டொனால்டு டிரம்ப் அல்லது ஜோ பிடன் ஆகிய இருவரில் யார் அதிபராக போகிறார்கள் என்பதை உறுதிபட அறிந்துகொள்ள வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க தேர்தல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications