வெறும் 700 ரூபாய்தான் கட்டணம்.. உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் அறிமுகம்.. விமான போக்குவரத்து துறையில் புது திருப்பம்
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் முதல் மின்சார விமானத்தை இயக்கியுள்ளது. விமான போக்குவரத்து துறையில் வரலாற்று திருப்பு முனையாக மின்சார விமானம் பார்க்கப்படுகிறது. 130 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வெறும் 694 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் தற்போது மின்சார வாகனங்கள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லை. எரிபொருள் தேவையில்லை. மின்சார பயன்பாடு என்பதால் குறைவான செலவில் நீண்ட தூரம் செல்ல முடியும் என்பதால் தற்போது சந்தைகளில் மின்சார வாகனங்கள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.

உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம்
கார்கள், பைக்குகள் மட்டும் இன்றி தற்போது சரக்கு வாகனங்கள் கூட எலக்ட்ரிக் முறையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் தற்போது எலக்ட்ரிக் விமானத்தையும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பெட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்த ஏலியா சிஎக்ஸ் 300 (Alia CX300) மின்சார விமானத்தை தயாரித்துள்ளது.
பயணிகளுடன் வெற்றிகரமாக பறந்த முதல் முழுமையான மின்சார விமானமாகும். இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் ஈஸ்ட் ஹாம்டன் நகரத்திலிருந்து ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்திற்கு நான்கு பயணிகளுடன் இந்த முதல் எலக்ட்ரானிக் விமானம் பறந்தது. சுமார் 70 கடல் மைல்கள் (130 கிமீ) தூரத்தை 30 நிமிடங்களில் இந்த விமானம் கடந்து சென்றது.
ரூ.694 தான் கட்டணம்
இந்த விமானத்தின் கட்டணம்தான் மிகவும் மலிவானது ஆகும். அதாவது, 130 கிலோ மீட்டர் பயணத்திற்கான கட்டணம் வெறும் 694 ரூபாய் ($8) மட்டுமே ஆகும். இதே தூரத்தை ஹெலிகாப்டரில் பயணம் செய்தால், சுமார் 13,885 ரூபாய் ($160) கட்டணம் ஆகும். மேலும், மின்சார இயந்திரங்கள் என்பதால் இரைச்சல் எதுவும் இல்லாத பயணமாக பயணிகளுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும். விமான போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆக பார்க்கப்படுகிறது.
பெட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் CEO கைல் கிளார்க் இது குறித்து கூறுகையில், "இந்த விமானத்தை சார்ஜ் செய்ய சுமார் $8 மட்டுமே செலவாகிறது. விமானி மற்றும் மற்ற செலவுகளை தவிர்த்து பார்த்தால், இது மிகவும் குறைந்த செலவுடையதாகும்" என்றார். 2017-ல் தொடங்கப்பட்ட பெட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது மின்சார விமான உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலை மேம்படுத்த 318 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. CX300 மற்றும் ஏலியா 250 eVTOL மாடல் விமானங்களை உருவாக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால்
இந்த ஆண்டின் இறுதிக்குள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் (FAA) சான்றிதழைப் பெறுவதே இலக்கு என்று தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கடல் மைல்கள் வரை பறக்கும் திறன் உள்ளதாம். இந்த விமானங்கள் நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கிடையே சிறிய தூரப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications