தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் - மமதா விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா: மேற்குவங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மமதா பானர்ஜி மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்வதாக பாஜக அளித்துள்ள புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மமதாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3ஆம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற உள்ள நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கூச் பெஹாரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மமதா பானர்ஜி, முஸ்லீம்கள் அனைவரும் தங்களின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகிய பாஜக நிர்வாகிகள், மாநில சட்டசபை தேர்தலில் முஸ்லீம்கள் ஒன்று கூடி தனது திரிணாமுல் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள புகார் மனுவில், தேர்தல் நடக்கவுள்ள கூச்பெஹார் என்ற பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முஸ்லிம்களின் வாக்குவங்கியை குறி வைத்து மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்தது சரியல்ல. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகும். மம்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நக்வி, மதரீதியாக வாக்கு கோரி தேர்தல் விதிகளை மீறியதுடன், இந்திய பிரதிநித்துவச் சட்டம் 1951 ஐயும் மம்தா மீறியுள்ளார். இதனால், மம்தா மீதும் அவரது கட்சி மீதும் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இதனால், வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்படவும் வாய்ப்புள்ளதால் கூடுதலானப் பாதுகாப்பு படையினரை அமர்த்தவும் கோரியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் மம்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பி, 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.