Sivanmalai: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் புதிய பொருள் வைத்து பூஜை! எதை உணர்த்துகிறது?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மண் கலயத்தில் தீர்த்தம், மண், ஏர் கலப்பை, பிரம்பு ஆகியவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதன் பின்னணியை பார்க்கலாம்.
காங்கேயத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற திருத்தலமான சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில், அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இங்கு மிகவும் புகழ் பெற்றது என்றால் அது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். இதில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள், சமூகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவதாக ஐதீகம் உள்ளது.

இவை உலகத்தில் ஏற்படும் மிக முக்கியமான நிகழ்வுகளை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காக முன்னதாகவே உத்தரவு பொருட்களாக பக்தர்கள் கனவில் தோன்றும். இவ்வாறு கனவில் வரும் பக்தர்கள் நேராக கோயிலுக்கு சென்று அங்கு தங்களுக்கு வந்த கனவை கூறுவார்கள்.
அவர்கள் சொல்வது உண்மையா என்பதை சோதிக்க பூசாரிகள் பூ போட்டு பார்ப்பார்கள். உத்தரவு கிடைத்தால் மட்டுமே பழைய பொருள் மாற்றப்பட்டு புதிய பொருள் வைத்து பூஜை செய்யப்படும். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி மஞ்சப்பிள்ளையார், வெற்றிலை பாக்கு, அருகம்புல், எலுமிச்சம் பழம் ஆகியவை வைத்து வழிபட உத்தரவு வந்தது.
அது முதல் அந்த பொருளை 40 நாட்களாக பூஜை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இதுவரை கடல் தண்ணீர், வைக்கோல், மண், மஞ்சள், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, புத்தகம், சைக்கிள், அரிசி, இளநீர், தங்கம், பூமாலை, உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொள்ளாச்சி, புரவிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் (50) என்ற விவசாயியின் கனவில் தோன்றி, மண் கலயத்தில் தீர்த்தம், மண், ஏர் கலப்பை, பிரம்பு ஆகியவை வைத்து பூஜை செய்ய வந்துள்ளது. அதன்படி நேராக கோயிலுக்குச் சென்ற கதிர்வேல், பூசாரியிடம் விஷயத்தை சொல்லி அவரும் பூப்போட்டு பார்த்து உத்தரவு வந்ததும் ஏப்ரல் 29-ஆம் தேதியான நேற்று முதல் இந்த பொருட்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
ஏர் கலப்பை: விவசாயம் மற்றும் உழவுத் தொழிலைக் குறிக்கிறது. ஏர் கலப்பை பெட்டிக்குள் வந்திருப்பதால், வரும் காலங்களில் விவசாயம் செழிக்கும் அல்லது விவசாயம் சார்ந்த தொழில்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.
மண் கலயத்தில் தீர்த்தம்: தீர்த்தம் (நீர்) என்பது உயிர் வாழ்வின் ஆதாரம். இது மழைப்பொழிவை முன்னறிவிப்பதாகக் கருதப்படுகிறது. நாட்டில் போதிய மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பும் என்பதற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பஞ்சம், வறட்சி இருக்காது என்பது அர்த்தம். அது போல் ஊர் ஒற்றுமை, குடும்ப நலன் உள்ளிட்டவையும் சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.













Click it and Unblock the Notifications