திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 26: மனிதன், இறைவனை எப்படி வணங்குவான்?
சென்னை: மார்கழி மாதம் 26-ஆம் நாள் இன்று! சாதாரண பக்தர்கள் பூ, கற்பூரம், தூபம், தீபம் என வழிபட்டு, துன்பம் வரும்போது, "இவ்வளவு செய்தும் சோதிக்கிறாயே! இது உனக்கே அடுக்குமா?" எனக் கடவுளைக் குறை கூறுகிறார்கள். அதேநேரம், உலகப் பற்றுகளைத் துறந்து இறைவனையே முழுமையாகச் சரணடைந்த பக்தர்களும் கோவில்களில் உண்டு.
மாணிக்கவாசகர் இறைவனை நம்பி வரும் இவ்விரு தரப்பினருக்காகவும் வேண்டுகிறார். அறிந்தும் அறியாமலும் பக்தி செலுத்தும் அனைவரும் பிறப்பற்ற நிலையை அடைந்து பேரானந்தத்தில் திளைக்க வேண்டும் என்பதே அவரது பிரார்த்தனை. இப்பக்தர்களுக்கான மிக முக்கியமான பாடலும் இதுவே.

திருப்பாவை பாடல் 26
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: பக்தர்களிடம் பேரன்பு கொண்டு, நீல நிறத்துடன் பிரகாசிக்கும், கடலின் ஆலிலையில் மிதக்கும் இறைவனிடம், பெரியவர்களால் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் மார்கழி நோன்பினைச் சிறப்புற நிறைவேற்ற, வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. உலகை அதிரவைக்கும் ஓசையுடைய, பால் நிற, பாஞ்சஜன்யம் போன்ற வலம்புரி சங்குகள், பெரும் முரசுகள், பல்லாண்டு பாடும் பெரியோர்கள், மங்கள தீபங்கள், கொடிகள், நோன்பு நிறைவேற்ற ஏற்ற இடமும் அருளப்பட வேண்டும் என்பதே அந்தப் பிரார்த்தனை.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 26
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்: பார்வதி தேவியின் துணைவரும், குளிர்ந்த தாமரை வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானை தரிசிக்க பக்தர்கள் திரண்டுள்ளனர். அவரது அருளை உணர்ந்த அடியவர்கள், குடும்ப பந்தபாசங்களைத் துறந்து வந்துள்ளனர். கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கேற்ப வணங்க வருகை தந்துள்ளனர். தங்கள் பிறவித் தளையை நீக்கி, தங்களை ஆட்கொண்டு முக்தி நிலை அருளுமாறு அவர்கள் வேண்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications