திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 11: கூட்டுப் பிரார்த்தனையின் மகத்துவம் தெரியுமா?
சென்னை: மார்கழி மாதம் 11-ஆம் நாள் இன்று! பொதுவாக எல்லோரும் சேர்ந்து இறைவனை வணங்க வேண்டும். கூட்டுப்பிரார்த்தனைக்கு எப்போதும் ஒரு மகத்துவம் உள்ளது. ஒரு வேண்டுதலை கூட்டாக சேர்ந்து இறைவனிடம் வைப்பதால் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதனால்தான் இன்று எல்லா இடங்களிலும் மதங்களை கடந்து கூட்டு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு ஒவ்வொருவரின் கஷ்டங்களும் தீர்கிறது.

திருப்பாவை பாடல் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: பல தோழியர் ஒரு வீட்டின் வாசலில் கூடினர். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். பசுக்களைக் காப்பவராகவும், பகைவர்களை எதிர்த்துப் போரிடுபவராகவும், களங்கமற்றவராகவும் விளங்கும் கோபாலனே அப்பாடல்களின் கருப்பொருளாய் இருந்தார்.
கோபாலனைத் தழுவ விழையும், மயில் போன்ற வனப்புடைய அந்தப் பெண்ணை எழுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. செல்வத்தையும், தன் பெண்மையையும் புனிதமாகப் போற்றுபவராக அறியப்பட்ட அவர், தோழியரின் வரவையும், பாடல்களையும் கேட்டும் அசையாமல் உறங்குவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த அர்த்தமற்ற தூக்கத்தால் அவருக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்றும் வினவினர்.
திருவெம்பாவை பாடல் 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: சிவபெருமானை போற்றித் துதிக்கும் பக்தர்கள், வண்டுகள் மொய்க்கும் பூக்களுடன் கூடிய குளத்தில் நீராடினர். தண்ணீரில் குதித்து நீந்தியபடியே, சிவபெருமானின் திருவடிகளை மனதில் குடிகொண்டு பாடியதாக தெரிவித்தனர். தலைமுறை தலைமுறையாகப் 'பாவை நோன்பு' என்ற பாரம்பரிய பூஜையை கடைப்பிடித்து வருவதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சிவபெருமான் சிவந்த நெருப்பைப் போன்றவர்; மேனி முழுவதும் திருநீறு பூசியவர்; செல்வத்தின் அதிபதி; சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் கொண்ட பார்வதி தேவியின் கணவர் என அவரை பக்தர்கள் புகழ்ந்தனர். இறைவனைப் பாடுவதன் மூலமே அனைத்து நன்மைகளும் தங்களுக்குக் கிடைக்கும் என்ற உணர்வு ஏற்படுவதாக அடியவர்கள் தெரிவித்தனர். இந்த பேரின்பநிலை என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையையும் அவர்கள் சிவபெருமானிடம் வைத்தனர்.












Click it and Unblock the Notifications