திருமலை திருப்பதிக்கு போறீங்களா? மலை பாதையில் இரு நாட்களுக்கு பைக் செல்ல தடை!
திருப்பதி: திருப்பதியில் 2 நாட்களுக்கு மலை பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி ஏழுமலையான் மலையப்ப சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் கருடசேவைதான்.
இந்த கருடசேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவர ஆலோசனை நடத்தியுள்ளது. அதன் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. திருப்பதியில் நடைபெறும் கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக கருட சேவையையொட்டி அக்டோபர் 7ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலைப் பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதத்தில் இலவச தரிசனம் செய்ய விரும்புவோருக்கு திருப்பதி ரயில் நிலையம் எதிரில் உள்ள அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸ் ஆகிய இடங்களில் தினமும் அதிகாலை 2 மணி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
டோக்கன் பெற்றதும் அதே நேரத்திலோ அல்லது அடுத்த நாளில் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திலோ சுவாமியை தரிசனம் செய்யலாம். சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
கருட வாகன சேவை கருடனின் பக்தியை போற்றும் வைபவம் ஆகும். பெருமாளின் கம்பீர பவனியை குறிப்பதாலும் இது சிறப்புக்குரிய சேவையாக கருதப்படுகிறது. கருட சேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் ஒன்று கூடி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வாகனத்தை இழுத்து வருவார்கள்.
கருட சேவையில் புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கருடனை போல் வலிமையான நல்ல ஆளுமையுடன் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications