அத்திவரதரின் ஆச்சரியம்.. காஞ்சிபுரம் கோயில் குளத்தின் ஸ்பெஷாலிட்டீஸ்.. அத்தி மரத்தில் அத்தி வரதர்
சென்னை: அத்திவரதரின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? குளத்தில் உள்ள பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார் ஏன் தெரியுமா? 40 வருடம் கழித்துதான் அத்திவரதரை வணங்க முடியுமா? ஆன்மீகம் சொல்லும் சிறப்பு தகவல்கள் என்னென்ன?
காஞ்சி வரதராஜ பெருமாளை கஜேந்திரனால் ஆராதிக்கப்பட்டதால் ஹஸ்தி கிரி என்று அழைக்கப்பட்டது. இதுவே தமிழில் ஹஸ்தி கிரி, அத்தி கிரியானது என்று சொல்லப்படுகிறது...

பெருமாள்: அதேபோல, காஞ்சிபுரத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்து இருந்ததால் அத்தியூர் என்று அழைக்கப்பட்டதாக சொல்வார்கள். இங்கு எழுந்தருளிய பெருமாளே அத்தி வரதர் என்று அழைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குள்ளே அமைந்திருக்கும், அனந்தசரஸ் புனித குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 வருடங்களை ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். காரணம், அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியிலுள்ள நான்கு கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார்
திருமேனி: அதுமட்டுமல்ல, இந்த குளத்தில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்... பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்க பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவேதான், அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 வருடங்களுக்கு ஒருமுறை மேலே வந்து 24 நாட்களுக்கு சயன மற்றும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.. பேரருளாளன் அத்திவரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள்.. தரிசனம் தந்தபிறகு, மறுபடியும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்க சென்று விடுவார்.
கடத்தல்: அத்திவரதர் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, ஆங்கிலேயர்கள் காலத்தில் கோயில் சிலைகள் அனைத்தையும், தங்களது நாட்டுக்கு கடத்திசென்றபோது, அத்திவரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சம் ஏற்பட்டதாம். அதனாலேயே அத்திவரதரை ஆராதித்து வந்தவர்கள் பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர்... சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத்தை சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்துக்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து ஒரு மண்டல காலத்துக்கு அவரை பூஜித்ததாகவும், பிறகு அதற்குள் அவரை மீண்டும் வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
தரிசனம்: எனினும், அத்திவரதரை பார்க்க இனிமேல் 40 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டாம்.. அத்தி மரத்தில் செய்யப்பட்ட பெருமாளை தரிசனம் செய்தாலே அத்திவரதரின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அத்திவரதரைப் போல உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்திமரத்தில் செய்யப்பட்டது.. வானமுட்டிப் பெருமாள் ஆலயம் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவர் அத்திமரத்தை கொண்டு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் வானமுட்டிப் பெருமாள் என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.
அத்திப்பழம்: குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர், அத்திப்பழத்தை சாப்பிட சொல்வார்கள். அதுபோலவே, அத்தி மரத்தை பார்த்தால் அத்திவரதரை நினைத்து வணங்கினால் அத்திவரதர் வரம் தருவார் என்பது நம்பிக்கையாகும்.
கோயிலுள்ள குளத்தில் அத்திவரதர் சிலையை வைப்பதற்கு முன்பு சில விஷயங்களை கடைப்பிடிப்பார்கள்.. குறிப்பாக வலிமை வாய்ந்த மரமான அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலை சேதமடையாமல் இருப்பதற்காக, சிலவித எண்ணெய்களால் தேய்க்கப்பட்டு, மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளார்.. அதனால்தான், 40 வருடங்கள் தண்ணீரில் இருந்தாலும், வரதர் எந்த சேதமும் அடையாமல் அதே புன்னகையுடன் காட்சி தருகிறார்.












Click it and Unblock the Notifications