இறந்தவர்கள் வீட்டுக்கு வர்றாங்களாமே.. எந்த நாளில் தெரியுமா? முன்னோர்கள் போட்டோ வைக்க உரிய திசை என்ன
சென்னை: கடவுள்களை வழிபடுவதை போலவே, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையும் பலரும் வழிபட்டு வருகிறார்கள்.. வருடத்துக்கு ஒருநாள் மட்டும் திதி தந்துவிடாமல், இறந்தவர்களின் புகைப்படங்களை வணங்குவது முதல் இறந்தவர்கள் வீடுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது வரை ஆன்மீகத்தில் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
இறந்தவர்களின் போட்டோக்களை, பூஜையறையில், படுக்கையறையில் வைக்கக்கூடாது.. இந்த 2 இடங்கள் தவிர வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

அதேபோல, இறந்து போனவருடைய பார்வை தெற்கு திசை நோக்கி இருக்கும்படியே அவர்களது போட்டோக்களை மாட்டி வைக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வளர்ச்சி பெருகும். வைத்தால் அது அந்த குடும்பத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும்.
கடவுள் படங்கள்: கடவுள் படங்களுக்கு ஏற்றுவது போலவே, முன்னோர்களுக்கும் விளக்கு ஏற்றலாம்.. ஆனால், இதற்கென்றே பிரத்யேகமாக விளக்கு வைத்து கொள்ள வேண்டும்.. கடவுள் விளக்குகளை எக்காரணம் கொண்டும், முன்னோர்களுக்கு ஏற்றக்கூடாது. அதேசமயம், எந்த எண்ணெய்யை பயன்படுத்தியும் விளக்கேற்றலாம். பூஜையறை எண்ணெய்யும் பயன்படுத்தலாம். பூஜை செய்வதுபோல, முன்னோர் படங்கள் முன்பும் கற்பூரம் காட்டி, மணியடித்து வழபடலாம்.
அதேபோல, இறந்தவர்களின் பொருட்களை குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது.. அப்படி பயன்படுத்தினால், அந்த ஆத்மாவிற்கு, இறந்த உடல், குடும்பம், உறவுகள் மீதான பற்று இருந்து கொண்டே இருக்குமாம்.. இதனால், அந்த உடையை பயன்படுத்துபவர்களும் மனரீதியாக பலவீனமடைந்துவிடுவார்களாம். அதுவும், அந்த ஆடைகளில் ரத்த கறை இருந்தால் வீட்டில் வைக்க கூடாது.. இறந்தவர்களின் உள்ளாடைகளையும் வீட்டில் வைக்க கூடாது.
தானங்கள்: எனவே, இறந்தவர்களின் உடைகளை எரித்துவிட வேண்டும்.. ஒருவேளை, எரிப்பதற்கு மனமில்லை என்றாலும், இறந்த 10 நாட்களுக்குள் அவைகளை சுத்தம் செய்து விட வேண்டும். அவர்கள் பயன்படுத்திய உடைகள், பொருட்களை வேறு வேறு இடங்களில் பிரித்து வைக்க வேண்டும். இவைகளை தானம் தருவதாக இருந்தாலும், எல்லா பொருட்களையும் ஒருவருக்கே தராமல், பலருக்கும் பிரித்து தர வேண்டுமாம்.
இறந்தவர்களுடைய தங்க நகைகளாக இருந்தாலும் அதை , குடும்பத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.. அந்த நகைகளை கடைகளில் கொடுத்து மாற்று நகையாக புதியதாக வாங்கி அணிந்து கொள்ளலாம்.
ஆராதனை: இறந்தவர்கள் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.. குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் நம்முடைய முன்னோர்கள் நம்முடன் பூமியிலேயே தங்கியிருப்பார்களாம்.. இந்த 15 நாட்களும் அவரவர் வீடுகளில் தங்கிக் கொள்ள எமதர்மராஜன் விடுமுறை அளிப்பாராம்.. மகாளய பட்ச காலத்தில், முன்னோர்கள் நம் வீட்டுக்கு வந்து, நாம் செய்யும் ஆராதனையை ஏற்றுக்கொண்டு, அமாவாசை அன்று மீண்டும் முன்னோர்கள் விண்ணுலகத்திற்கே சென்றடைவார்கள் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications