சிரஞ்சீவி அனுமன்..ராம நாமம் சொன்னால் போதும்..சனி தோஷத்தில் இருந்து காப்பான் வாயு புத்ரன்
மதுரை:
சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து தப்பிக்கலாம். அஞ்சனை மைந்தன் அனுமன் அவதரித்த நாளில் அவரை வேண்டி விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்படுபவர்கள் அனுமனை சரணடைய சனிதோஷம் நீங்கும்.
எவர் ஒருவர் ஸ்ரீராமரையோ அல்லது ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை அனுமன் ஏற்பார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாட்களையும் விட அனுமன் ஜெயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. அவருக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து வழிபடலாம்.

அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். அவர் அவதரித்த நாளில் ராம நாமம் ஜெபிக்கலாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் பங்குனி பவுர்ணமி, சில வருடங்களில் சித்திரை பவுர்ணமி நாட்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு இன்றைய தினம் அனுமன் ஜெயந்தி வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
அனுமன் அவதாரம்
திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். 'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்' என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, 'அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்' என்று ஆசி கூறினாள்.

திருமலையில் தவமிருந்த அஞ்சனை
தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.
ஈசனின் அம்சமான அனுமன்
ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.

சனி தோஷங்கள் நீங்கும்
அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரண்டு நாள்களில் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.
துன்பங்கள் நீக்கும் அனுமன்
ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் நம் துன்பங்கள் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் முடியும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, சனிதசை, சனி புக்தி காலங்களால் சிரமப்படுபவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்யலாம். வாஸ்து கோளாறு உள்ள வீட்டின் வாசல் படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

சகல நன்மைகளையும் தரும் அனுமன்
அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications