Mahalaya amavasai: 2025 மகாளய அமாவாசை எப்போது? சிறப்புகள் என்ன.. திதி கொடுக்க உகந்த நேரம் எது? இதோ விவரம்
சென்னை: புரட்டாசி அமாவாசை (Mahalaya amavasai) மிக முக்கியம். அன்றைய தினம் தர்ப்பணம், விரதம், அன்னதானம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி, ஆண்டு முழுவதும் அமாவாசை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை வரும் நாள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கூறப்படுகிறது. மகாளய என்றால் "கூட்டாக வருதல்" என்று அர்த்தம். அதாவது, மறைந்த நம்முடைய முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்கிறோம். அதிலும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மகாளய அமாவாசை
ஏனெனில், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையில் மட்டுமே நம்முடைய முன்னோர்கள் நம்முடன் தங்கியிருந்து ஆசி வழங்குவதாக கருதப்படுகிறது. எனவே, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்தவர்களுக்கு, பெற்றோர்களின் இறந்த தேதியை மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம், பித்ரு சாபங்கள் எதுவானாலும், இந்த மகாளய அமாவாசையின்போது அதன் ஆற்றலும், தாக்கமும் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது
ஆகவேதான், எந்த அமாவாசையில் விரதமிருந்து, முன்னோர்களை வழிபட தவறியிருந்தாலும் மகாளய அமாவாசையன்று மட்டும் விரதமிருந்து, தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்த பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது. 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசை வருகிறது. இந்த உலகிற்கு நாம் வருவதற்குக் காரணமான நாளை ஒருபோதும் மறக்கக்கூடாது. புராணங்களிலும் கூட இதுபற்றி பல கருத்துக்கள் உள்ளன. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். எனவே மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கியமானது.
எங்கெல்லாம் தர்ப்பணம் செய்யக்கூடாது?
அமாவாசை காலகட்டம் என்பது எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்க வல்லது. அதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடமும் மிகவும் முக்கியமானது. தேங்கியிருக்கும் நீரில் தர்ப்பணம் செய்யக்கூடாது. ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது, ஆற்றங்கரை அல்லது கடற்கரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
உகந்த நேரம் எப்போது?
புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளில் திதி கொடுக்க உகந்த நேரம் காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்க்க வேண்டும். அதிகாலை முதல் 7 மணி வரை கொடுப்பது சிறப்பு மிக்கதாகும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்து கூட பித்ருக்களை வழிபடலாம்.












Click it and Unblock the Notifications