சிவன்மலை உத்தரவுப்பெட்டியில் தீர்த்த கலசம்.. அன்று வந்த சுனாமி..தண்ணீர் பூஜையால் வெள்ளம் வருமா?
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தீர்த்தகலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட போது சுனாமியும், வெள்ளமும் வந்துள்ள நிலையில் இந்த ஆண்டும் மழை வளம் அதிகரித்து காவிரியில் வெள்ளம் வருமா என்ற எதிர்பார்ப்பு பக்தத்களிடையே எழுந்துள்ளது.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளை வைத்து சமூகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படும். உணவுப்பொருட்களை வைத்தோ, மளிகை பொருட்களை வைத்தோ பூஜை செய்தால் விலை ஏற்றம் ஏற்படும். மஞ்சள் வைத்தும், பருத்தி வைத்தும் சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைத்து பூஜை செய்த போது அதிக விலை ஏற்றம் ஏற்பட்டது. நூல் விலை அதிகமாக உயர்ந்தது. மஞ்சள் விலை உயர்ந்த போது விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் துப்பாக்கித் தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா, பாகிஸ்தானை வென்றது என்றும், மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டபோது ஊழல் வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டது. மண் வைத்து பூஜை செய்யப்பட்ட போது ரியல் எஸ்டேட் உச்சத்தை தொட்டது. அதே போல தங்கம் வைத்து பூஜை செய்யப்பட்ட போது தங்கம் விலையும் உயர்ந்தது.
கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்ற பக்தரின் கனவில் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்ய சிவன்மலை ஆண்டவர் உத்தரவிட்டார். இதனையடுத்து நல்லெண்ணெய்,அரிசி வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தன.
இந்த நிலையில் சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தீர்த்தகலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டுக்கு பின்னர் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஐந்தாவது முறையாக தண்ணீர் வைத்து பூஜை செய்யப்படுகிறது. தற்போது நிலவும் வறட்சி வெள்ளமாக மாறுமா? என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இதே போல் கலசத்தில் தண்ணீர் வைத்த போது சுனாமி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
28.01.2004 முதல் 28.11.2005 வரை ஒரு சொம்பு தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. பின்னர் 13.12.2011 முதல் 02.07.2012 வரை ஆற்று நீர் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. 12.08.2012 முதல் 05.11.2012 வரை மீண்டும் தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்டது. இறுதியாக 17.05.2013 முதல் 06.02.2014 வரை மீண்டும் தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தீர்த்த கலசம் வைத்து இன்று முதல் பூஜை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சரியான அளவில் தொடங்கவில்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தாலும் கர்நாடகாவில் உள்ள அணைகளில் மட்டுமே தண்ணீர் நிரம்பி வருகிறது. கபிணி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீர் திறந்து விடப்படும். மேட்டூர் அணை நீர் மட்டமும் சரிந்து வருகிறது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்படுவதால் நடப்பாண்டு பருவமழை தீவிரமடைந்து காவிரி நதியில் பெருவெள்ளம் பொங்கி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications