வெள்ளேருக்கு வெற்றி.. வெள்ளெருக்கு விநாயகர்.. அற்புத வேர்களின் நன்மை.. திரியை இந்த பட்டையில் போடுங்க
சென்னை: வெள்ளெருக்கு வேர்களின் ஆன்மீக பலன்கள் என்னென்ன தெரியுமா? வெற்றிதரும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு தரும் நன்மைகள் என்னென்ன? எருக்கஞ்செடிகளில் பொதிந்துள்ள பல்வேறு விஷயங்களை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
வெள்ளெருக்கு செடியை பொறுத்தவரை, இலை, பூ, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை.. இதில், வெள்ளை எருக்கஞ்செடி இறைபூஜைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

சூரிய பகவானின் தன்மையையும், சிவபெருமானின் அம்சமாகவும் இந்த பூக்கள் கருதப்படுகின்றன. சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானதாக உள்ளது வெள்ளெருக்கு பூக்களாகும். விநாயகருக்கும் சிவனுக்கு இந்த வெள்ளெருக்கு பூவில் மாலைகட்டி வழிபடுவார்கள்.
வெள்ளெருக்கு: வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால், அந்த வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம். ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.
வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும் என்பார்கள். ஆனால், இந்த சிலையை உடனடியாக செய்துவிட முடியாது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் வளர்ந்த பிறகே, வெள்ளெருக்கு செடியானது சிலை செய்வதற்கு உகந்ததாக மாறுகிறது.
மண்டல பூஜைகள்: அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேர்களை பயன்படுத்தியே சிலை தயார் செய்யப்படும். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வார்களாம்.. அதேபோல, தீய சக்திகள் உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேர்களில் விநாயகர் சிலை செய்ய பயன்படுத்த மாட்டார்கள்.
வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்பு, வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டிவிடுவார்கள்.. பிறகு ஒருவாரம் கழித்து, வெள்ளெருக்கு வேரை எடுத்து, உரிய முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்துவார்கள்..
வேர்கள்: இதற்கு காரணம், வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டது. எனவே, அதிலுள்ள வேரை உடனடியாக வெட்டி எடுத்து விடாமல், சில பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்குமாம்..
அதேபோல, வீட்டின் பூஜைகளில் போடப்படும் விளக்கு திரிக்கு பதிலாக, வெள்ளெருக்குப் பட்டையில் விளக்கேற்றினால், கூடுதல் பலன் கிடைக்குமாம்.. இதனால் துர்சக்திகள் வீட்டில் இருந்தாலும், விலகி ஓடிவிடும். இந்த வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கிலிட்டு தீபம் ஏற்றினால் சகலவித எதிர்மறைகளும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
வெள்ளெருக்கு பிள்ளையார்: புதிதாக வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டுக்கு வாங்க நேர்ந்தால், அதனை வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில், அந்த விநாயகர் சிலைக்கு மஞ்சளை பூச வேண்டும். பிறகு அடுத்த வெள்ளிக்கிழமையும் ராகுகாலத்தில் சந்தன விழுதை பூசி நிழலிலேயே உலர்த்த வேண்டும்.
ஒருவேளை வெள்ளெருக்கு பிள்ளையார் கிடைக்காவிட்டால், நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலம், வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து விநாயகர் செய்து கொள்ளலாம்.
எதிர்மறை சக்திகள்: பொதுவாக எருக்கஞ்செடிகளை வீட்டில் வைத்து வளர்த்தால், வீட்டை சுற்றியிருக்கும் எதிர்மறை தன்மையை தடுத்துவிடும். இதனால் தீய சக்திகள் வீட்டுக்குள் நுழையாது என்பார்கள். ஒருவேளை எருக்கஞ்செடியை வீட்டுக்கு முன்பு வளர்க்க முடியாமல் போனால், வெள்ளெருக்கன் வேர்கட்டை என்று நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். இதை வாங்கி வீட்டுக்கு முன்பாக கட்டி தொங்கவிட்டாலும், எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழையாது.












Click it and Unblock the Notifications