ஸ்ரீரங்கநாதனுக்கு தங்கச்சியம்மா..தைப்பூச நாளில் நம்பெருமாளிடம் சீர்வாங்கும் சமயபுரம் மாரியம்மன்
தைப்பூசம் நாளில் தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ரங்கநாதர் சீர்வரிசை கொடுத்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி: ஆயிரம் புடவைகள் நகைகள் என கணவன் வீட்டில் வாங்கிக் கொடுத்தாலும் பிறந்த வீட்டில் அதுவும் சகோதரன் கொடுக்கும் புடவைகள், சீர் வரிசைக்கு என தனி மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. மனிதர்களாக பிறந்தவர்கள் கொடுக்கும் சீர் புடவையை வாங்குவதே சிறப்பானது. அதை விட சிறப்பானது சகோதரன் ஸ்ரீரங்கநாதர் சகோதரி சமயபுரம் மாரியம்மனுக்கு கொடுக்கும் சீர் வரிசை பொருட்களை பார்ப்பது. தைப்பூசம் நன்னாளில் திருச்சியில் வசிக்கும் மக்களுக்கு இந்த அற்புதமான பாக்கியம் கிடைக்கிறது.
சமயபுரத்தாள் தன்னை காண வரும் பக்தர்களின் குறைகளை தீர்ப்பவள். ஸ்ரீரங்கநாதன் தங்கை. அந்த தங்கைக்காக ஸ்ரீரங்கம் கோயில் கருடமண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, சந்தனம், மஞ்சள், மாலை, பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அடங்கிய தட்டுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக நாதஸ்வரம் இசைக்க, மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் புடை சூழ, நம்பெருமாள் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருகை தந்தார். அண்ணனின் சீர் வரிசையை பெருவதற்காக தங்கை சமயபுரத்தாள் காத்துக்கொண்டிருந்தார்.

கொள்ளிடக்கரையில் தங்கை மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் விசேஷ நிகழ்ச்சியை பல்லாயிக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கண்டு தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அதிகாலை,1 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு கொள்ளிடக்கரையில் மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வட திருக்காவேரியில் இருந்து அம்மன் சமயபுரம் நோக்கி புறப்பட்டார்.
அதிகாலை அம்மன் வழி நடை உபயங்களுடன் நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வந்து மீண்டும் சமயபுரம் திருக்கோவிலை அடைகிறாள். அண்ணனிடம் கை நிறைய சீர் பெற்று கோவிலுக்கு திரும்பும் சமயபுரத்தாளை தரிசனம் செய்தால் வேண்டிய வரம் பெறலாம். தைப்பூசம் நன்னாளில் காலம் காலமாக சீர் கொடுக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.

திருக்கடையூரில் தன்னை அண்டிய மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற ஈசன் கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை அழித்தார். இதனால் உலகில் ஜனன மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. இதனைக்கண்ட எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.
இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியை பார்க்க ,பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை மாயாசூரனை வதம் செய்ய அனுப்பி வைத்தாள். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை கோர்த்து ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி,ஈசனின் அருளுடன் தனது தமையன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் முதலில் அமர்ந்து,பின்னாளில் இப்போது உள்ள சமயபுரத்தில் வந்தமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறாள்.

இதன் காரணமாகவே தங்கைக்கு சீர் வரிசை தருகிறார் அண்ணன் ஸ்ரீரங்கநாதர். இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரங்கனாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது,சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது நம் சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே சூடப்படுகிறது.
கருவறையில் சமயபுரம் மாரியம்மனின் வலது திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக் காணலாம். சமயபுரம் மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.












Click it and Unblock the Notifications