திருச்செந்தூர் கடலில் சூரசம்ஹாரம்.. ஆணவத்துடன் வந்த சூரனை வதம் செய்தார் செந்தில் ஆண்டவர்.. பரவசம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பக்தர்களின் அரோகா முழக்கத்துடன் நடைபெற்றது.. திருச்செந்தூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நேரில் கண்டு பரவசம் அடைந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்... இதில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுவது கந்த சஷ்டி விழாவாகும்.

கந்த சஷ்டி: ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்... சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
அந்தவகையில், கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜையுடன் விமரிசையாக ஆரம்பித்தது.. அன்று முதல் தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற காலவேளை பூஜைகள் சிறப்பாக நடந்து முடிந்தன..
இன்று மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளினார்.. அப்போது, முதலில் சூரன் தலையை ஆட்டிக்கொண்டு வந்தான்.. அவனை பல்லக்கில் சுமந்து வருவார்கள். சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலிலிருந்து புறப்படும் சூரன், நகரின் வீதிகளில் வலம் வந்தான்.. அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை இங்குமங்கும் அசைத்தபடியே வந்தான்.
கடற்கரை: சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள். ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத்தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருளினார்.. அப்போது விரதம் மேற்கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.. கடலில் நிசப்தம் நிலவியது..
போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வந்தது.. பிறகு, சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின்வாங்கி சென்றது.. இதைத்தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டு, அது சூரனை நேரடியாக தாக்கியது.
3 உருவங்கள்: அப்போது சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொண்டான். முதலில் யானை முகன் எடுத்ததுமே, முருகன் சார்பாக அர்ச்சகர் ஒருவர், அவன் நெற்றியில் வேலால் குத்தி வீழ்த்தினார்.. அடுத்ததாக சிங்க முகன் எடுத்ததுமே, சூரனின் உடலில் சிங்கமுகாசுரன் தலையை பொருத்தினார்கள்.
சிங்கமுகன் நெற்றியிலும் அர்ச்சகர் வேலால் குத்தி வீழ்த்தினார்.. அடுத்ததாக சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்பட்டது.. அப்போதும் சூரபத்மன் தலை துண்டிக்கப்பட்டது. ஆனாலும் வேறு வேறு வேறு தலையுடன் சூரபத்மன் தோன்றி கொண்டே இருந்தான்.. ஒரு கட்டத்தில் விநாயகர் தலையுடன்கூட சூரபத்மன் தோன்றினான்.. ஆனால், எந்த உருவத்தை மேற்கொண்டாலும் அவைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு கொண்டே இருந்தது.
மாமரம்: கடைசியாக மாமரமாக தோன்றினான் சூரன்.. இந்த மாமரத்தையும் ஜெயந்தி நாதர் வதம் செய்தார்.. மாமரம் 2 ஆக பிளவுபட்டு, ஒருபகுதி சேவலும், மற்றொரு பகுதி மயிலுமாக உருமாறியது.. சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற உள்ளன.. அப்போது 6 நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் குளித்து விட்டு, உணவு சாப்பிட்டு விரதத்தை இனி முடித்து கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications