விடிந்தால் வைகாசி விசாகம்.. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மீன் உள்பட அசைவ உணவு சமைக்க தடை
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை, முருகப்பெருமான் பிறந்த விசாக நட்சத்தை யொட்டி வைகாசி மாதம் வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது
தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அசைவ உணவுகளை சமைக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற முருகன் திருக்கோயில்களில் முக்கியமானது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமில். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள். வைகாசி விசாக விழா புதன்கிழமையான நாளை தான் நடைபெற உள்ள நிலையில், தற்போதே பல்லாயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
வைகாசி விசாக திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடத்தப்படும். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெற உள்ளது. வைகாசி விசாகத்தை ஒட்டி நாளை ஒருநாள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மொத்த திருச்செந்தூர் நகரமும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. மக்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் தற்போது காணப்படுகிறது. விடிந்த உடன் முருகனை தரிசிக்க பல ஆயிரம் பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். விழாவில் பங்கேற்பதற்காக கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கியுள்ளனர்.
இதனிடையே நாளை வைகாசி விசாகத்தையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் விரதத்தின் நிறைவாக மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் கோவில் வளாகத்தில் மீன் சமைப்பது, அசைவம் சாப்பிடுவது ஆக விதிகளுக்கு எதிரானது என்பதால், திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் ஆணையர் கார்த்திக் அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications