சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்? இப்படி ஒரு காரணமா?
பத்தினம்திட்டா: ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் போது தென்னங்கன்றை எதற்காக கொண்டு செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருந்து பக்தர்கள் ஜனவரி மாதம் மகரவிளக்கிற்கு வந்து ஐயனை தரிசிப்பார்கள்.

ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் போது குருசாமிமார்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஐயன் வகுத்துக் கொடுத்ததாகும். அந்த வகையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் தென்னம்பிள்ளையுடன் வருகிறார்களே அது ஏன் தெரியுமா?
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு தென்னம்பிள்ளையையும் உடன் எடுத்துச் செல்வது எதற்காக என்பதை தெரிந்து கொள்ளலாம். ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18ஆவது வருடம் செல்லும் போது இருமுடி அணிந்து கொண்டு ஒரு தென்னங்கன்றையும் எடுத்துச் செல்வது வழக்கம்.
இது நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆன்மீக பழக்கமாகும். தென்னங்கன்றை வாங்கி வந்து ஒரு தாம்பாளத் தட்டில் ஆற்று மணலை நிரப்பி அதில் தென்னம்பிள்ளையை வைத்து தூய நீரை தெளிக்க வேண்டும். தென்னங்காயான தேங்காயில் மூன்று பக்கமும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
தினமும் வீட்டில் பூஜை செய்யும் போது தென்னங்கன்றுக்கும் காட்ட வேண்டும். பிறகு பக்தியுடன் வணங்க வேண்டும். ஏனென்றால் 18ஆவது சபரிமலை பயணம் புனிதமானது. அதிலும் தென்னங்கன்றை பார்த்ததும் இவர் 18 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் குருசாமி என கருதும் பக்தர்கள் அவருடைய காலில் விழுந்து ஆசி பெறுவார்கள்.
பின்னர் அந்த தென்னங்கன்றை சபரிமலை சன்னிதானத்தில் உள்ள குளத்தின் அருகே வைத்துவிட வேண்டும். தென்னையை மனித இனத்திற்கு இணையாகவே கருதுகிறோம். அதற்காகத்தான் அவற்றை தென்னம்பிள்ளை என்கிறோம்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்கள் இருமுடியை கொண்டு செல்வார்கள். அந்த இருமுடியில் ஒரு பகுதியில் நெய் தேங்காயும் மறு பகுதியில் அபிஷேக பொருட்களும் இருக்கும். முன்பெல்லாம் அங்கு உணவகக் கடைகள் வருவதற்கு முன்னர், ஒரு முடியில் மளிகை பொருட்களை கொண்டு சென்ற பக்தர்கள் சமைத்து சாப்பிட்டு வந்தனர்.
ஆண்டுக்கு 5 முறை மட்டுமே சபரிமலையின் நடை திறந்திருக்கும். இந்த கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால். ஐயப்பன் கோயிலின் பிரசாதம் என்றால் அரவணை பாயாசம், அப்பம்தான். இரவு நேரத்தில் ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டதும் கோயில் நடை சாத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications