இந்தியாவில் மொத்தமாக முடக்கப்படும் 2ஜி, 3ஜி சேவை? அம்பானி வைத்த கோரிக்கை.. அப்போ ஜியோ பிளான் என்ன
டெல்லி: நாடு முழுக்க இருக்கும் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகள் சேவையை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஜியோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணத்தையும் இதன் பின்னணியையும் நாம் பார்க்கலாம்.
நாடு முழுக்க டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் என்றால் அது ஜியோ தான். ஜியோவின் வருகைக்குப் பின்னரே தடையற்ற அதிவேக இணையம் நாட்டின் பெரும்பகுதிக்குச் சென்று சேர்ந்தது.

இதற்கிடையே நாடு முழுக்க 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளின் சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
சேவையை நிறுத்த வேண்டும்: தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கும், அனைத்து வாடிக்கையாளர்களும் எளிதாக 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு மாறவும் 2ஜி மற்றும் 3ஜி சேவை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டிராய் அமைப்பு 5ஜி தொடர்பாக ஆலோசனை கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்த கருத்துகளைக் கூறி இருக்கிறது.
கடந்த ஆண்டு, டிராய் அமைப்பு 5ஜி குறித்த ஒரு ஆலோசனை கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அதில் பாலிசி சவால்கள் குறித்தும் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக மக்கள் ஏற்றுக்கொள்ள எடுக்க வேண்டிய கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் விளக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பதில் தரும் வகையிலேயே ஜியோ இந்த ரெஸ்பான்ஸை சமர்ப்பித்துள்ளது. 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை முழுமையாக நிறுத்த தெளிவான கொள்கை வகுக்க வேண்டும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ: இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறுகையில், "2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளின் சேவைகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற நெட்வொர்க் செலவுகள் குறையும்.. மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு எளிதாக மாறுவார்கள். அனைத்து தரப்பு மக்கலும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறப்பான ஒரு 5G எகோ சிஸ்டத்தை உருவாக்க இது பெரும் உத்வேகத்தை அளிக்கும்.
வேகமான மற்றும் நம்பகமான இணையச் சேவையை வழங்குவதன் மூலம் பல்வேறு துறைகளில் ஏற்படும் டிஜிட்டல் மாற்றங்களுக்கு 5ஜி சேவை முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 5ஜி நெட்வொர்க்கில் நமக்கு அதிவேக இணையம், குறைந்த லேட்னஸியில் கிடைக்கும். இது பல்வேறு துறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். எனவே, அனைத்து பயனாளர்களுக்கும் 5ஜி சென்றடைய நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
வோடபோன்: அதேபோல நாட்டின் மற்றொரு முக்கிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் நிறுவனமும் இதற்குப் பதிலளித்துள்ளது. மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் இன்னும் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வருவதாகவும் அவர்களும் 5ஜி சேவையைப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், குறைந்த வருமானம் கொண்ட நபர்களும் 5ஜி சேவையை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வோடபோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் உள்ள மக்களின் கணிசமானோர் பழைய தொழில்நுட்பத்தை அதாவது 2ஜி சேவையைப் பயன்படுத்துகின்றனர்.. புதிய 4ஜி மற்றும் 5ஜி சேவை இருந்தாலும் அவர்களால் அதை அணுக முடியவில்லை. பல காரணங்களால் அவர்கள் தொடர்ந்து பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களால் பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாமல் போகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சமீபத்தில் நடந்த ஜியோ நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, "உலகத் தரத்தில் ட்ரூ 5ஜி சேவையை இந்தியாவில் ஜியோவால் தர முடிந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரம், கிராமம் இப்போது அதிவேக இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.. ஜியோ தொழில்நுட்பத்தில் புது சகாப்தத்தைப் படைத்து வருகிறது. பழைய தொழில்நுட்பங்களைத் தாண்டி ஜியோவின் புது தொழில்நுட்பம் மக்களைச் சென்றடையும்" என்றார்.












Click it and Unblock the Notifications