Abhinay: "உறவுனு யாரும் இல்லை" அபிநயின் கடைசி பேச்சு! 2 நாளில் மாற்று கல்லீரல்! ஆனால், விதியின் கோரம்
சென்னை: 'துள்ளுவதோ இளமை' பட நடிகர் அபிநயின் திடீர் மறைவு, தமிழ் திரையுலகில் ஒரு சோக அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபிநய், சில நாட்களில் மாற்று சிகிச்சை பெற இருந்த நிலையில் காலமானது, அவரது ரசிகர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

சில நாட்களில் நடக்க இருந்த அதிசயம்
அபிநயின் மரணம் குறித்து அவரது பகிர்ந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அபிநய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து வைத்திருந்தார். உறுப்பு தானத்திற்கான பட்டியலில், அபிநயின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்ததாம்! முதலிடத்தில் ஒரு வெளி மாநில தலைவரின் பெயர் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் இவருடையப் பெயர்தான் முதல் இடத்தில் இருந்தது.
விதியின் கோரம்
இதனால், இன்னும் ஒரு சில நாட்களில் இவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில் தான், எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை அவர் காலமானார். சரியான நேரத்தில் உறுப்புக் கிடைக்க இருந்தும், அதற்கு முன்பே விதி விளையாடி விட்டதே என்று அவரது உறவினர்கள் கண்ணீர் மல்கப் பேசியுள்ளனர்.
அபிநயின் கடைசி பேட்டி
அபிநய் இறப்பதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த வறுமையையும், தனிமையையும் இந்தப் பேட்டி வெளிப்படுத்தியது. "என்னுடைய வாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட நான் யாரிடமும் கடனாய்க் கேட்டது இல்லை என்று தான் சொல்வேன். நான் போய் கேட்டபோது, 'அவர்கள் இப்போதானே செலவாச்சு, இப்போதானே அவங்களுக்கு கொடுத்தேன், இவங்களுக்கு கொடுத்தேன்' என்று கதை சொல்லி விடுவார்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி, நமக்கு ஒருவர் உதவ போவதில்லை என்பதை நான் பல வருடங்களில் அனுபவித்திருக்கிறேன்."
"அதிலும் நண்பர்கள் கூடச் சில நேரங்களில் மனம் இறங்குவார்கள், ஆனால் உறவினர்கள் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கு உறவினர்கள் யாரும் இல்லாத மாதிரிதான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்," என்று அபிநய் கண்கலங்கிய நிலையில் பேசியிருந்தார்.
கண்ணீர் விட்ட திரையுலகம்
'துள்ளுவதோ இளமை' மூலம் அறிமுகமான அபிநய், 'சிங்காரச் சென்னை', 'பொன் மேகலை' போன்ற படங்களில் நாயகனாக நடித்திருந்தார். அத்துடன், 'துப்பாக்கி' போன்ற படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்திருந்தார். உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானார்.
இறுதி சடங்கு
அவரது இறுதி சடங்குகளை தமிழ் திரைப்பட சங்கத்தினர் தான் தற்போது செய்து வருகின்றனர். அவர்களுடன், ஏற்கனவே அபிநய்க்கு வீடு மற்றும் மாத வாடகை உதவிகளைச் செய்து வந்த நடிகர் KPY பாலா, இறுதி சடங்குக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, சொந்தச் சகோதரனாக நின்று நடத்தியிருக்கிறார்.
உறுப்பு கிடைக்கவிருந்த சில நாட்களில் அபிநய் காலமானது, வறுமையால் வாடிய அவரது தனிமை நிறைந்த பின்னணி, மற்றும் திரைத்துறையினர் அவருக்கு செய்த உதவிகள் என ஒட்டுமொத்தச் சம்பவங்களும் கோலிவுட்டில் ஒரு நீங்காத துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications