ரோகிணியின் துணிச்சல்.. உண்மை, நேர்மையை கற்று தந்த அப்பா.. ரகுவரன், மகனை பற்றி கேட்டதுமே ஒரே பூரிப்பு
சென்னை: தன்னுடைய நேர்மைக்கும், கடும் உழைப்புக்கும் காரணமே தன்னுடைய அப்பாதான் என்று பேட்டி ஒன்றில் பூரித்து சொல்கிறார் நடிகை ரோகிணி.. தன்னுடைய மகனை பற்றியும் அந்த பேட்டியில் மகிழ்ந்து பேசியிருக்கிறார் ரோகிணி.
Aval Vikatan சேனலுக்கு நடிகை ரோகிணி சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் தன்னுடைய மகனை பற்றி மிகவும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், "நானும் என் மகன் ரிஷியும் அதிகமாக பேசுவோம்.. எல்லா விஷயத்தை பற்றியும் பேசுவோம்.. இப்போதுதான் ரகு நடித்த படங்களை பார்க்க ஆரம்பிச்சிருக்கான். சின்ன வயசில், அப்பா-ன்னு நினைச்சிட்டே படம் பார்த்தான். இப்போதுதான், எப்படிப்பட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறார்? எப்படி பெர்பார்ம் செய்திருக்கிறார்? என்று பார்க்கிறான்.
நான் நடித்த படங்களில் மகளிர் மட்டும் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.. மலையாளத்தில் நடித்த பேய் படம் ஒன்று பிடிக்கும்.. ஆனால், ரிஷிக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. அட்லாண்டாவில், கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்-ல் பிஎச்டி பண்ணிட்டு இருக்கான்.. வேலை செய்துட்டே படிக்கிறான்...
பொருளாதார சிக்கல்: நான் சில படங்கள் செய்யக் கூடாதுன்னு நினைச்சதுக்கு காரணமே, பண தேவைகள்தான். ஆனால், பொருளாதாரத்தில் கீழே விழுந்துவிட்டதாக ஒருபோதும் நினைத்ததில்லை. நடிக்கவில்லை என்றாலும் பொருளாதார சிக்கல் எனக்கில்லை. மகன், அமெரிக்கா சென்று படிக்க நேர்ந்ததால், அந்த படிப்புக்காக சம்பாதித்தேன். போன வருடம்தான், இந்த பாரம் குறைந்தது. இனிமேல் என்னுடைய கனவை நோக்கி செல்ல வேண்டும்.
என் மகனை வளர்ப்பதில், நண்பர்களின் உதவி நிறைய எனக்கு கிடைத்தது.. தனிப்பட்ட முறையிலும், பொறுப்பாக வாழவும், ரிஷி கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நான் மட்டும்தான் அவனுக்கு இருக்கிறேன் என்பதை புரிய வைத்தேன்.. அடிச்சாலும், அணைச்சாலும் நான் மட்டும்தானே அவனுக்கு.
சினிமா ஆசை: வருஷத்தில என் மகன் 2 மாசம்தான் என்கூட இருக்கான்.. மற்ற மாதங்களில், என் சம்பந்தப்பட்ட பணிகளை என்னால் செய்து கொள்ள முடிகிறது.. எனக்கு என் அப்பாதான், துணையாக இருந்துள்ளார்.. அவர் நடிக்க விரும்பினார்.. அது நடக்காமல் போய்விட்டதால், என்னை நடிப்புக்கு கொண்டுவந்தார்.. அவரால்தான் இங்கே நான் இருக்கேன்.. சினிமாவில் எப்படி அணுக வேண்டும்? எந்த அளவுக்கு உழைக்கணும்? என்பதை கற்று தந்தது என் அப்பாதான்.
ஆனால், ஒரே வருத்தம் தான் எனக்கு இருக்கு. தன்னுடைய ஆசைக்காக சினிமாவில் என்னை நடிக்க வைத்துவிட்டு, பிறகு என்னை படிக்க வெச்சிருக்கலாம். எனக்கு என்ன பிடிக்கும்? என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை எனக்கு அப்பா தரவில்லை. எனக்கு விருப்பு, வெறுப்பு இருக்கலாம் என்பதை அவர் யோசித்திருக்கலாம்.
நெகிழ்ச்சி: மற்றபடி, இன்றைக்கு நான் இந்த அளவுக்கு உண்மையை பேச காரணம் என் அப்பாதான். இவ்வளவு தைரியமாக இருக்க காரணமும், இந்த அளவுக்கு கடுமையாக உழைக்க காரணமும் என் அப்பாதான்" என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார் நடிகை ரோகிணி.
சமீபத்தில்கூட ரோகிணி வேறொரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில் ரகுவரனை பற்றி சொல்லும்போது, "நானும் ரகுவரனும் பிரிந்த பின்பும் நண்பர்களாக பேசி கொண்டு இருந்தோம். விவாகரத்திற்கு பிறகும் ஒரு நட்பு இருந்தது. இருந்தாலும் இன்னும் சிறிது காலங்கள் அவருடன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் இப்போதுவரை தன்னுடைய மனதில் நெருடிக் கொண்டிருக்கிறது. அவர் இறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டேன்" என்று உருக்கமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications