காத்திருந்து கிடைத்த ஆண் குழந்தை உயிரிழந்தது.. உருக்கமாக சோகங்களை பகிர்ந்த பாடகி அனிதா குப்புசாமி
தனக்கு பிறந்த ஆண் குழந்தை பிறந்தவுடன் உயிரிழந்ததாக பாடகி அனிதா குப்புசாமி உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பாடகி அனிதா குப்புசாமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பாடகி அனிதா குப்புசாமிக்கு ஒரே ஒரு மகள் இருக்கும் நிலையில் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து இறந்து இருக்கிறது.
தன்னுடைய குழந்தையின் இறப்பு பற்றியும் அதற்கு பிறகு தான் பட்ட வேதனையை பற்றியும் அனிதா குப்புசாமி சமீபத்தில் பேசியிருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடகி
அனிதா குப்புசாமி ஒரு நாட்டுப்புற பாடகியாக இருந்து வருகிறார். திரைப்பட பின்னணி பாடகி ஆகவும் இருக்கிறார். அவருடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி உடன் இணைந்து பல கிராமிய பாடல்களை எழுதியும், பாடியும் வருகிறார். அனிதா குப்புசாமி தன்னுடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமியோடு சேர்ந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 3000 மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.தன்னுடைய பாடல்களில் எய்ட்ஸ், வரதட்சணை, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் பற்றிய பல சமூக விழிப்புணர்வுகளை பாடி வருகிறார்கள்.

காதல் திருமணம்
அனிதா குப்புசாமி சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தன்னோடு படித்த புஷ்பவனம் குப்புசாமியை சந்தித்து இருக்கிறார். இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாக பாடி இருக்கிறார்கள். இவர்கள் முதலில் நட்பாக பழகி பிறகு காதலித்து திருமணமும் செய்து இருக்கின்றனர். இவர்களுக்கு பல்லவி என்கிற ஒரு மகள் பிறந்திருக்கிறார். தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்ததாகவும் அதுபடியே தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்றும் கூறியிருக்கிறார்.

குழந்தையின் இறப்பு
அனிதா குப்புசாமிக்கு ஆப்ரேஷன் மூலமாகத்தான் இரண்டாவது குழந்தை பிறந்ததாம். இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தை அவ்வளவு அழகாக இருந்ததாம். கலராகவும் முகத்தில் ஒரு வசீகரத்தோடும் இருந்ததாம். ஆனால் இவர் மயக்கத்தில் இருக்கும் போது மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தவறாக ஊசி செலுத்தி விட்டார்களாம். அதனால் குழந்தையின் நெஞ்செல்லாம் எரிந்து குழந்தை இறந்து விட்டது என்று கண் கலங்க பேட்டியில் பேசி இருக்கிறார்.

அடுத்தடுத்த சோதனைகள்
அது மட்டுமல்லாமல் பிறகு தன்னுடைய மகள் தனியாக வாழ கூடாது அதனால் தனக்கு மேலும் எத்தனை குழந்தைகள் வேண்டும் என்றாலும் பிறக்கட்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாராம். ஆனால் பிறகு இவர் மருத்துவமனைக்கு சென்று செக் பண்ணி பார்க்கும்போது இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் இருந்திருக்கிறார். உடலில் ஏற்பட்ட சிறு பாதிப்பினால் இவரால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. அந்த வருத்தத்தை சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications