"கேப்டன் பிரபாகரன் 2" விரைவில்! கதாநாயகன் தான் ஸ்பெஷல் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு; உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, 'கேப்டன் பிரபாகரன் 2' திரைப்படம் உருவாகும் என்று அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் பிரபாகரன் ஒரு காவியம்
1991-ம் ஆண்டு வெளியான 'கேப்டன் பிரபாகரன்', விஜயகாந்தின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களின் 100-வது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், விஜயகாந்தின் 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' வெள்ளி விழா படமாக அமைந்தது.
சுவாரசியமான பின்னணி
இந்தப் படத்தின் கதை, சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு நேர்மையான வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தின் மூலம் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். படம் முழுக்க இருந்த அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
கேப்டன் பிரபாகரன் 2 அறிவிப்பு
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, 'கேப்டன் பிரபாகரன் 2' திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆன இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அளித்திருக்கும் அமோக வரவேற்பு, இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான ஊக்கத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"விஜயகாந்தின் ஆன்மா கேப்டன் பிரபாகரன் 2-ஐ இயக்கச் சொல்கிறது" என்று உருக்கமாகக் குறிப்பிட்ட ஆர்.கே.செல்வமணி, அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத் தகுதியான நடிகரைத் தேர்ந்தெடுப்பது சவாலானது என்றும் கூறியுள்ளார். விஜயகாந்தின் கம்பீரமான தோற்றத்திற்கும், நடிப்புக்கும் பொருத்தமான ஒரு நடிகர் தேவைப்படுவதால், இந்தப் படத்திற்குச் சரியான நடிகரைத் தேடி வருவதாகக் கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தின் வெற்றி, விஜயகாந்தின் புகழ் காலத்தால் அழியாதது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த அமோக வரவேற்பு, 'கேப்டன் பிரபாகரன் 2' திரைப்படத்திற்கு வழிவகுத்துள்ளது. விஜயகாந்தின் கனவுகளுக்கு உயிரூட்டும் விதமாக, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அமையுமா? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதுபோல விஜயகாந்த் கேரக்டரில் அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடித்தால் அருமையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ரீ-ரிலீஸ் வசூல் சாதனை
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த ரீ-ரிலீஸிலும் படம் அமோகமான வசூலைக் குவித்து வருகிறது.
கேப்டன் பிரபாகரன் வசூல் நிலவரம்
முதல் நாள்: ₹42 லட்சம், இரண்டாம் நாள்: ₹86 லட்சம்,மூன்றாம் நாள்: ₹1.3 கோடி, நான்காம் நாள்: ₹1.96 கோடி இவ்வாறு, படம் வெளியான நான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக ₹4.54 கோடியை வசூல் செய்து, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரையரங்கு காட்சிகளின் அதிகரிப்பு
ஆரம்பத்தில் சில திரையரங்குகளில் ஒரு காட்சி அல்லது இரண்டு காட்சிகளாக மட்டுமே வெளியிடப்பட்ட 'கேப்டன் பிரபாகரன்', ரசிகர்களின் அமோக வரவேற்பைக் கண்டு, தற்போது நான்கு காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், விஜயகாந்த் தனது அசைக்க முடியாத ரசிகர் பட்டாளம் மூலம் ரீ-ரிலீஸிலும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.












Click it and Unblock the Notifications