விஜய் டிவியில் “அதே கண்கள்” சீரியலில் நடிச்சேன்.. இரவோடு இரவாக நடந்த சங்கதி.. அமீர் உடைத்த ரகசியம்
சென்னை: இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான "அதே கண்கள்" என்ற சீரியலில் நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தான் அந்த சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இணையம் மற்றும் செய்தி சேனல்களில் அமீர் செய்தி தான் அதிகமாக தென்படுகிறது. போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகு அவரோடு சம்பந்தப்பட்ட பலரை போலீஸ் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜாபரின் நண்பராக இருந்த இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அதற்கு அமீர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறி இருக்கும் நிலையில் விசாரணைக்கு பிறகு அவர் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் பேட்டிகளிலும் அமீர் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் தான் சீரியலில் நடித்திருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதிலும் 1996 முதல் 1998 ஆண்டு வாக்கில் வெளியான அதே கண்கள் என்ற திகில் சீரியலில் தான் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்று அமீர் கூறி இருக்கிறார். அமீரை இயக்குனராக தான் பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்குப் பிறகுதான் இவர் நடிகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆரம்பத்தில் சீரியலில் இவர் நடித்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இவருக்கு சீரியல் வாய்ப்பு திடீரென்று தான் வந்திருக்கிறது. அந்த நேரத்தில் பணரீதியாக அமீர் ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் அவருடைய நண்பர் ஒருவர் போன் போட்டு நாளைக்கு சென்னையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அதே கண்கள் என்ற சீரியலுக்கு சூட்டிங் இருக்கிறது.
உன்னால் வர முடியுமா? என்று கேட்டிருக்கிறார். உடனே அமீர் என்ன செய்ய என்று யோசித்து பஸ்ஸில் போனால் நேரமாகும் என்று தன்னிடமிருந்த பணத்தை பிளைட் டிக்கெட் வாங்கி பிளைட்டில் மதுரையில் இருந்து இரவே கிளம்பி சென்னைக்கு வந்து விட்டாராம். அந்த நேரத்தில் ட்ரெயின் மற்றும் பஸ் கிடைக்கவில்லை. அதனால் சொன்ன நேரத்திற்கு வரவேண்டும் என்று நான் பிளைட்டில் வந்து விட்டேன்.
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கையில் எடுத்துக் கொண்டு போன சூட்கேஸை பார்த்ததும் அங்கிருந்த நடிகர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க தொடங்கி விட்டார்கள். நானும் நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் தான் எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அந்த சூட்கேஸை பார்த்ததும் அங்கிருந்த நடிகர்கள் யார் இவர் மதுரையில் பண்ணையார் மகனா? அதனால் தான் மதுரையில் இருந்து சென்னைக்கு பிளைட்டில் வந்திருக்கிறாரா?
சீரியலில் நடிப்பதற்காக இவ்வளவு செலவு பண்ணி இருக்கிறாரே! என்றெல்லாம் என்னை பற்றி அங்கு கிசுகிசுப்பு செய்தனர். எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. ஆனால் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட வேண்டும் என்றுதான் என்னுடைய கையில் இருந்த மொத்த பணத்தையும் டிக்கெட் எடுத்து நான் பிளைட்டில் வந்தேன்.
அந்த சீரியல் 10 அல்லது 15 எபிசோடுகளாக சூட்டிங் எடுத்தார்கள். ஆனால் ஒளிபரப்பானது 20 முதல் 25 எபிசோடு என்று நினைக்கிறேன். அதனால் அந்த சீரியல் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று அமீர் அந்த பேட்டியில் தன்னுடைய முதல் சீரியல் அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications