தேர்தலுக்கு முன்பு விஜய் பற்றி உருக்கமாக வீடியோ வெளியிட்ட எஸ்.ஏ சந்திரசேகர்.. தயங்கியபடி வைத்த வேண்டுகோள்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்காக, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், முன்பு போல உற்சாகமாக இல்லாமல், கொஞ்சம் தயக்கத்துடன், மெதுவாக பேசும் எஸ்.ஏ.சி., ஆனாலும் மகனுக்கான ஆதரவை நேரடியாக மக்களிடம் கேட்கிறார். ஆரம்பத்திலேயே அவர் சொல்வது, "என்னுடைய மகன்... உங்கள் தளபதி விஜய்... அரசியலுக்கு வந்த பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை தாங்கி கடந்து வந்துகொண்டிருக்கிறார். அது எல்லாம் நீங்கள் கொடுக்கிற ஆதரவால்தான் சாத்தியமாகிறது" என்பதுதான்.

மாற்றம் வருமா?
அதற்குப் பிறகு அவர் பேசும் வார்த்தைகளில் ஒரு எமோஷனல் தெரிகிறது. "தமிழ்நாட்டில் உண்மையான மாற்றம் வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்துக்காக போராடக்கூடிய ஒரு இளைஞன் தான் விஜய். பல தடைகளை தாண்டி, ஒரு சாதாரண தொண்டனாகவே உங்களிடம் தலைமை ஏற்க வந்திருக்கிறார்" என்று கூறுகிறார்.
விஜய் அப்பா வெளியிட்ட வீடியோ
அதிலும் குறிப்பாக, "இது ஒரு மௌன புரட்சி... ஒரு விரல் புரட்சி... விசில் அடிக்கும் நேரம் இது" என்று தேர்தல் குறியீட்டை எடுத்துக் கொண்டு அவர் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. "நாளை நீங்கள் விசில் சின்னத்தில் போடும் ஒரு வாக்கு, மே 4ஆம் தேதி தமிழ்நாட்டில் முழுக்க விசில் சத்தமாக மாற வேண்டும்" என்று அவர் வாக்கு கேட்கிறார்.
மகனுக்காக வாக்கு சேகரிப்பு
அவர் பேச்சில் இன்னொரு முக்கியமான விஷயம், "இந்த தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் இல்ல... இது ஒரு மாற்றம்... ஒரு எழுச்சி. கத்தி இல்லாமல், ரத்தம் இல்லாமல் வரக்கூடிய ஒரு பெரிய மாற்றம் இது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வாய்ப்பு" என்று கூறி இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், "எஸ்.ஏ.சி. பேசும்போது குரலில் ஒரு தளர்ச்சி இருந்தாலும், மகனைப் பற்றிய நம்பிக்கை மட்டும் குறையவில்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் பற்றிய சர்ச்சைகள்
இதே நேரத்தில், முன்பும் பல இடங்களில் மகன் பற்றி பேசிய எஸ்.ஏ.சி., விஜய் குறித்து சில விஷயங்களை தெளிவாக சொல்லியிருந்தார். அதில் முக்கியமாக விஜய் மீடியாவை சந்திக்க பயப்படுகிறார் ஆறு மணிக்கு மேலே மீட்டிங் நடத்த மாட்டேன் என்கிறார் அதுபோல எந்த பிரச்சாரத்திற்கு போனாலும் பேப்பரில் எழுதி வைத்ததை தான் படிக்கிறார் என்று பலரும் கூறி வந்த நிலையில் அது குறித்தும் எஸ்ஏசி கொடுத்திருக்கிறார்.
எஸ்ஏ சந்திரசேகர் பதிலடி
"அரசியல்வாதி என்றாலே தினமும் மீடியாவை சந்திக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை" என்று விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார். மேலும், "ஒவ்வொரு தொகுதியின் பிரச்சனைகளையும் குறிப்பெடுத்து படித்து தான் விஜய் பேசுகிறார். அதனால்தான் அவர் பேப்பரை பார்த்து பேசுகிறார்" என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
அதேபோல், "மக்கள் தான் முதலில்... குடும்பம் பின்னாடி" என்ற மனநிலையில்தான் விஜய் செயல்படுகிறார் என்றும் தனது மகனைப் பற்றி பெருமையாக கூறியிருந்தார். இப்போது தேர்தலுக்கு முன் வெளியான இந்த வீடியோ, ஒரு அரசியல் பேச்சாக மட்டுமல்லாமல், ஒரு அப்பா தனது மகனுக்காக நேரடியாக மக்களிடம் நின்று வாக்கு கேட்கிற தருணமாகவே பலரால் பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், விஜயின் அரசியல் பயணம் எவ்வளவு சவால்களை சந்தித்திருக்கிறது என்பதையும், அதற்குப் பின்னால் இருக்கும் குடும்ப ஆதரவைவும் இந்த வீடியோ காட்டுகிறது.












Click it and Unblock the Notifications