அயிரை மீனை எப்படி சாப்பிடணும்.. அள்ளி சாப்பிடணும்.. இப்படிக்கு டாடி ஆறுமுகம்!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கிராமத்து சமையலில் டாடி ஆறுமுகம் சமையல் வருகிறது.
இதில் வயதான முதியவர் டாடி ஆறுமுகம் சமைக்கும் சமையல் படு பிரசித்தி. இவர் சமைக்கும் அசைவ சமையல் மட்டும்தான் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகிறது.
திங்கள் முதல் வெள்ளி முதல் தினமும் இவரின் வீடியோக்கள் ஒளிபரப்பப் படுகின்றன.ஆப்பிள் பாயசம்...கோபி மஞ்சூரியன் என்று இவர் செய்தால் யாரும் விரும்பிப் பார்ப்பதில்லை.
அயிரை மீன் குழம்பு
டாடி ஆறுமுகம் இன்று அயிரை மீனை வாங்கி வந்து குழம்பு வைத்து காண்பித்தார். அயிரை மீன்கள் அத்தனையும் உயிரோடு இருந்தன. மற்ற மீன்கள் போல் இந்த மீன்களை தலையை வெட்டி சுத்தம் செய்யத் தேவை இல்லையாம். அப்படி சுத்தம் செய்யவும் முடியாது.
பாலில் உப்பு
முதலில் பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நிறைய பால் ஊற்றி உப்பு சேர்த்து அயிரை மீனை அதில் கொட்டிவிட வேண்டும். அயிரை மீன் அந்த பாலைக் குடித்துவிட்டு வயிற்றில் இருக்கும் மண்ணை எல்லாம் கக்கிவிட்டு செத்துவிடுமாம்.வயிற்றில் எந்த கழிவும் இருக்காதாம். அப்படியே டாடி ஆறுமுகம் செய்தார்.
எடுத்து கழுவி
பின்னர் மீனை எடுத்து மஞ்சள் உப்பு சேர்த்து கழுவினார். இப்படி இரண்டு முறை உப்பு சேர்த்து கழுவி சுத்தம் செய்தார். மீன் சுத்தம் ஆன பின்னர் கொதிக்கும் குழம்பில் போட்டு கொதிக்க வைத்தார். வழக்கம் போல மீன் குழம்பு வைப்பது போலத்தான் அயிரை மீன் குழம்பும் வைக்க வேண்டும் என்று டாடி ஆறுமுகம் சொன்னார்.
அள்ளி சாப்பிடணுமாம்
அயிரை மீனை ஒவ்வொன்றாக சாப்பிடக் கூடாதாம். அப்படியே எடுத்து அள்ளி சாப்பிடணுமாம். டாடி ஆறுமுகம் சமைத்துவிட்டு அப்படியே சாதத்தில் போட்டு அள்ளி சாப்பிட்டார்.மற்ற மீன்களை போல அயிரை மீனை சுத்த செய்வது என்பது கடினமல்ல ரொம்ப சுலபம் என்பது புரிகிறது.அவசரத்துக்கு மீன் குழம்பு வைக்கவேண்டும் என்றால் அயிரை மீன் குழம்பு வையுங்கள்.