விஜே சித்ராக்கு நடந்தது தான் கயல் சீரியல் நடிகைக்கும்! வெளியே தெரியாத ரகசியத்தை உடைத்த அபிநவ்யா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினியின் திடீர் மரணம் சின்னத்திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், அவருடன் நடித்த நடிகை அபிநவ்யா கண்கலங்கியபடி சுபாஷினி பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அபிநவ்யா கூறும்போது, சுபாஷினி உயிரிழந்ததாக வந்த தகவலை அவர் உடனே நம்பவில்லையாம். "ஒரு மணி நேரத்துக்கும் மேல இது உண்மை இல்லைன்னு நினைச்சேன். இது வேற யாராவது இருக்கும், தவறான தகவல் இருக்கும் என்று சொல்லிக்கிட்டே இருந்தேன். ஆனா பிறகு அது உண்மைன்னு தெரிஞ்சதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

விஜே சித்து மாதிரி
சுபாஷினி இறந்த பிறகு சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துகளே அவரை மிகவும் வேதனைப்படுத்தியதாகவும் அவர் தெரிவிக்கிறார். "ஒருத்தர் உயிரோட இருக்கும்போது பேசுறது வேற. ஆனா அவர் இல்லாத பிறகு எப்படி வேண்டுமானாலும் பேசுறது ரொம்ப தப்பு. இதே மாதிரி முன்னாடி விஜே சித்து விஷயத்திலும் நடந்தது. அவர் இறப்பதற்கு பிறகு பலர் பலவிதமாக பேசுறாங்க, இப்போ சுபாஷினிக்கும் அதே மாதிரி நடக்குது. உண்மை தெரியாம யாரையும் குற்றம் சொல்லக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.
நட்பு
சுபாஷினியை முதல் நாள் பார்த்த அனுபவத்தையும் அபிநவ்யா பகிர்ந்துள்ளார். பெங்களூரில் இருந்து வந்தவர் என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் போல்டான குணம் கொண்டவராக இருப்பார், நம்மோடு அதிகமாக கலந்துக்க மாட்டார் என்று நினைத்ததாக அவர் சொல்கிறார். ஆனால் பின்னர் அவருடன் நெருக்கமாக பழகிய பிறகு அந்த எண்ணம் முழுவதும் மாறிவிட்டதாகவும், மிகவும் எளிமையான மற்றும் நல்ல மனசு கொண்டவராக சுபாஷினி இருந்ததாகவும் கூறுகிறார். அபிநவ்யாவுடன் மட்டும் அல்லாமல் முழு கயல் சீரியல் குழுவினருடனும் அவர் நெருக்கமாக பழகியிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுபாஷினியின் இயல்பை பற்றி பேசும்போது, அவர் எப்போதும் சந்தோஷமாக இருப்பார் என்று அபிநவ்யா கூறுகிறார். யாராவது நெகட்டிவ் பேசினால் அந்த இடத்தில் இருப்பதையே விரும்ப மாட்டார். சத்தமாக பேசுவதும் அவருக்கு பிடிக்காது. மிகவும் லைட்டான மனநிலையுடன் இருப்பார். டான்ஸ் செய்ய ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் கூட ஆடுவார். இவ்வளவு உற்சாகமாக இருந்த ஒருவர் இப்படியான முடிவு எடுப்பார் என்று நினைத்ததே இல்லை என்று அவர் வருத்தமாக கூறுகிறார்.
கணவன் மனைவி பிரச்சனை
சமூக வலைதளங்களில் பேசப்படும் கணவன்-மனைவி பிரச்சனை குறித்தும் அபிநவ்யா விளக்கம் அளித்துள்ளார். "அவங்க கணவர் பற்றி ஒருபோதும் தப்பா பேசல. ரெண்டு பேரும் சண்டை போட்டது நாங்க பார்த்ததே கிடையாது. ரொம்ப நல்ல புரிதலோட இருந்தாங்க. பெரிய பிரச்சனை இருந்தது மாதிரி எங்களுக்கே தெரியல" என்று அவர் கூறுகிறார். அதனால் வெளியே கூறப்படும் காரணங்களை முழுமையாக நம்ப முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதே நேரத்தில், அந்த நேரத்தில் சுபாஷினியின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அபிநவ்யா கூறுகிறார். "தனியா இருந்த சமயத்தில் ஏதோ மனசுக்கு பெருசா பாதிப்பு இருந்திருக்கும். அதனால் தான் இந்த மாதிரி முடிவு எடுத்திருப்பாங்க" என்று அவர் கூறுகிறார்.
அவரது பேச்சில் மிகுந்த வேதனை வெளிப்பட்டது ஒரு இடத்தில். "அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு போன் பண்ணி இருந்தா, நாங்க யாராவது போயிருப்போம். பேசிப் பார்த்து அவங்க மனசை மாற்றியிருப்போம். ஆனா அந்த வாய்ப்பே கிடைக்கல" என்று அவர் கண்கலங்குகிறார்.
இறுதியாக, இந்த சம்பவம் மூலம் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை அபிநவ்யா முன்வைக்கிறார். எந்த பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தீர்வு கிடையாது. யாரும் இப்படியான முடிவை எடுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்துகிறார்.
சுபாஷினி போன்ற வெளியில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்த ஒருவரின் உள்ளத்தில் என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாத புதிராகவே உள்ளது. இந்த சம்பவம் ஒரு செய்தி மட்டுமல்ல, ஒருவரை பற்றி தீர்ப்பு சொல்லும் முன் உண்மையை காத்திருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையை விட பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்பதையும் நினைவூட்டுகிறது.












Click it and Unblock the Notifications