நான் அவரை விட்டு விலகி போகிறேன்.. நம்பி ஏமாந்துட்டேன்! உருக்கமாக கெனிஷா போஸ்ட்! காரணம் இதுதானா?
சென்னை: பாடகி மற்றும் தெரபிஸ்ட் கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவிக்கிடையேயான பிரச்சனையில் "நான் காரணம் இல்லை" என்று விளக்கமளிக்கும் வகையில் கெனிஷா வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்களில் தனது வாழ்க்கையில் சந்தித்த பல வேதனையான சம்பவங்களையும் அவர் உருக்கமாக பகிர்ந்திருந்தார்.

கெனிஷா வெளியிட்ட வீடியோ
தனது அப்பா அம்மாவின் இறப்பு, அதற்குப் பிறகு சந்தித்த பாலியல் தொந்தரவுகள், சிறுவயதிலேயே நடந்த திருமணம், மன அழுத்தம், வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள் போன்ற பல விஷயங்களை கண்ணீர் மல்க பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள மூன்று பக்க Instagram பதிவில் கெனிஷா, "நான் தேவைக்கு அதிகமாக பேசிவிட்டேன். காதலுடன் இந்த கதைக்குள் வந்தேன், இப்போது அமைதியுடன் வெளியேறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷா போஸ்ட்
மேலும், "சில இடங்கள் சத்தம், அகம்பாவம், தீர்ப்புகள் மற்றும் பொய்யான கதைகளால் நிரம்பி விடுகின்றன. அப்போது அங்கே நல்ல மனசுக்கும் காதலுக்கும் இடமே இருக்காது" என்றும் தெரிவித்துள்ளார்.
"ஒரு மனிதரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து என்னுடைய வாழ்க்கையின் பல பகுதிகளை நான் கொடுத்தேன். ஆனால் மக்கள் ஏற்கனவே ஒரு கதையை உருவாக்கி விட்டார்கள். இந்த உலகத்தில் குழப்பத்துக்கு எதிராக நல்ல மனசு நிற்க முடியாது என்பதை இப்போது புரிந்து கொண்டேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
விலகி போகிறேன்
அதோடு, "பொதுமக்கள், சினிமா துறை, விமர்சகர்கள், அவரை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள், கிண்டல் செய்பவர்கள் - இப்போது அவர் முழுமையாக உங்களுடையவர்" என குறிப்பிட்டுள்ளார்.
"இனி எந்த விளக்கமும் இல்லை. என்னுடையது அல்லாத போராட்டங்களை இனி சுமக்க மாட்டேன். நல்ல மனிதர்களுக்கு வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தது என் முட்டாள்தனம். ஆனால் இந்த உலகம் பொய்யர்கள், ஏமாற்றுபவர்கள் மற்றும் மனிதர்களை பயன்படுத்துபவர்களுக்கான இடம் என்பதை புரிந்து கொண்டேன்" என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
"நான் அமைதியுடனும் அன்புடனும் முழுமையான விலகலுடனும் அவரை விடுவிக்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.
"உண்மையான அன்பு, விசுவாசம், மென்மை என்ன செய்ய முடியும் என்பதை உலகம் பார்க்க அனுமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்போது மக்கள் உண்மையை விட உணர்ச்சியால் உருவாக்கப்பட்ட கதைகளையே நம்புகிறார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நான் இனி எதிர்த்து போராட மாட்டேன். நல்ல மனசை புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் அதை நிரூபிக்க முயற்சிக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

உருக்கம்
அதிர்ச்சியூட்டும் வகையில், "நான் சென்னையை விட்டு வெளியேறிவிட்டேன். என் இசையையும், என் தெரபியையும், இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையையும் கைவிடுகிறேன். மனிதர்கள் கடவுள் உருவாக்கியதை உடைக்க முடிகிறது போல" என்றும் கூறியுள்ளார்.
அதோடு, "ஆன்லைன் அவதூறு, மனஅழுத்தம், மாயை மற்றும் தாக்குதல்களால் தான் நான் விலகுகிறேன். Instagram உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "எனக்கு தேவையான தனிமையை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட கெனிஷா, "இன்றைய நிலவரப்படி பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றுவிட்டது" என்ற வரிகளுடனும் தனது பதிவை முடித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் இவ்வளவு உருக்கமாக பதிவு வெளியிட்டதுக்கு காரணம் ரவி மோகன்தானா? ரவியை விட்டு இவர் பிரிந்து விட்டாரா? அதனால் தான் இவர் இவ்வளவு உணர்வுபூர்வமான பதிவுகளை வெளியிட்டு இருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரவி மோகன் உடன் பாடல்
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரவி மோகன் காலில் விழுந்து கெனிஷா வணங்கி இருந்தார். பிறகு ரவி மோகனுடன் மேடையில் பாட்டுப்பாடி இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரிதாக பரவி வந்தது. அப்போது சிலர் கெனிஷாவை திட்டி கமெண்ட்ஸ் போட்டிருந்தனர். அதில் ஒரு கமெண்டுக்கு ஆர்த்தி ரவியை திட்டி கெனிஷா கமெண்ட் கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆர்த்தி ரவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதை விசாரித்த நீதிபதி, கெனிஷா ஆர்த்தி ரவியை விமர்சித்து எந்த போஸ்ட்களும் வெளியிடக்கூடாது ஏற்கனவே போட்ட பதிவுகளையும் நீக்க வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தனர். அதற்குப் பிறகுதான் கெனிஷா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த நிலையில் ரவி மோகன் பெயரை சொல்லாமலேயே நான் அவரை விட்டு விலகுகிறேன் என்று அவர் பேசி இருப்பது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications