CWC-யில் நடந்த வாக்குவாதம்.. மன்னிப்பு கேட்க சொன்னாங்க! பாதியிலே வந்துட்டேன்.. மணிமேகலை எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருக்கும் நிலையில் என்ன காரணத்திற்காக தான் நிகழ்ச்சியிலிருந்து விலகினேன் என்பது பற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜே மணிமேகலை ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதற்குப் பிறகு ஒரு சில சேனல்களில் பணியாற்றி விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து நான்கு சீசனாக கோமளியாக இருந்த மணிமேகலை நான்காவது சீசனில் இருந்து திடீரென வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு மீண்டும் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து ஐந்தாவது சீசனிலும் ஆரம்பத்தில் இருந்து தொகுப்பாளராகவே கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன். இனி அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதில் இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட ஒரு பெண் தொகுப்பாளர் அவர் என்னுடைய பணிகளை செய்ய விடவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். மணிமேகலையின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான் என்று கருத்து கூறி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை பற்றி தன்னுடைய youtube சேனலில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் மணிமேகலை பேசுகையில், நான் 15 வருடங்களாக மீடியா துறையில் இருக்கிறேன். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட போது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் நான் எப்படி என்னுடைய திறமையை காட்ட முடியும் என்று யோசித்தேன். இதுவரைக்கும் நான் தொகுப்பாளராக இருந்தேன் அதனால் இந்த நிகழ்ச்சியிலும் அப்படித்தான் இருப்பேன் என்று நான் நடந்து கொள்ளவில்லை.
நான்கு சீசன்களாக நான் கோமாளியாக தான் இருந்தேன். அதற்குப் பிறகு இந்த சீசனில் நான் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறேன். அதற்கு தான் சம்பளம் வாங்குகிறேன். அதனால் நான் அதற்குள்ள வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து நான் விலகிய நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட ஒரு பெண் தொகுப்பாளர் தனக்கு தான் எல்லாமே தெரியும், தான் பல வருடங்களாக இந்த சேனலில் வேலை பார்க்கிறேன். தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு என்னை வேலை பார்க்க விடாமல் தடுக்கிறார்.

இது குறித்து நான் சேனல் தரப்பிடமும் நிகழ்ச்சி தயாரிப்புக்கு தரப்பினரிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு சரியான ஆக்சன் எடுக்கவில்லை. அவர்கள் நாம் இது பற்றி சொன்னால் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அதனால் நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நமக்கு சுயமரியாதை தான் ரொம்ப முக்கியம்.
ஆனால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று வெளியே சொன்னதை தவறு என்று நிகழ்ச்சியில் என்னை அந்த தொகுப்பாளரிடம் மன்னிப்பு கேட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர சொன்னார்கள். அப்படி மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு இன்னும் சில நிகழ்ச்சிகள் தருகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு என்னுடைய தன்மானத்தையும், சுய கௌரவத்தையும் விட்டு நான் எந்த தவறும் செய்யாமல் இறங்கி போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அந்த நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
நான் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது பாதியில் தான் அதன் நிகழ்ச்சியில் இருந்து வந்தேன். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது பல ரசிகர்கள் ஏன் நீங்க பாதிக்கு பிறகு காணவில்லை என்று கேட்கிறார்கள். அங்கு நடந்தது இதுதான் என்னுடைய வேலையை செய்ய விடாமல் முதல் நாளிலிருந்து தடுத்துக் கொண்டிருப்பது போல அன்று அதிகமாக தடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு திறமை இருக்கிறது நான் இந்த நிகழ்ச்சி இல்லை என்றால் எங்கே வேறு என்ன வேலை என்றாலும் என்னால் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் நான் இது பற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் சொல்லும் போது அவர்கள் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று விட்டால் உங்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல பேசுகிறார்கள். திறமை இல்லாமல் இருந்தால்தான் நான் மன்னிப்பு கேட்டு அவர்களிடம் வேறு சில நிகழ்ச்சிகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் எனக்கு அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் ஆரம்பத்தில் இருந்தே எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு தான் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். அதனால் தைரியமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதுவரைக்கும் நான் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இதுபோல இல்லை. இந்த ஐந்தாவது சீசன் மொத்த குழுவினர்களும் வேறு மாதிரியான எண்ணங்களோடு இருக்கிறார்கள். அவர்களோடு என்னுடைய வேலையை இனி என்னால் தொடங்க இயலாது என்று அந்த வீடியோவில் மணிமேகலை பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications