பராசக்தி, ஜனநாயகனுடன் போட்டியா? இசை விழாவில் ரஜினி, கமல்? விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பராசக்தி'. இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில் 'பராசக்தி' திரைப்படம் குறித்து பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

படத்தின் தரம் குறித்து பேசிய ஆகாஷ் பாஸ்கரன், 'பராசக்தி' ஒரு சாதாரண மாஸ் படமாக இல்லை. 'பாட்ஷா' போன்ற உச்சத்தை நோக்கி செல்லும் படமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தின் இண்டர்வல் பிளாக், ரசிகர்களுக்கு முழுமையான 'பாட்ஷா மொமெண்ட்' உணர்வை தரும் வகையில் அமைந்திருப்பதாகவும், அது படத்தின் மிக முக்கியமான ஹைலைட் தருணங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் ரவிமோகன் இடையிலான மோதல் காட்சிகள் படத்தில் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சில பிரபலங்கள் இப்படத்தில் ஸ்பெஷல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
படத்தின் சென்சார் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆகாஷ் பாஸ்கரன், 'பராசக்தி' படத்தின் சென்சாரில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனால் ரிவைசிங் கமிட்டி வரை செல்ல வேண்டிய நிலை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். படத்தின் தலைப்பை தொடக்கூடாது என்று தொடக்கம் முதலே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இருந்தாலும் இந்த பிரச்சனையை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை தங்களுக்கிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பிறகு வந்த ஒரு இயக்கத்தை இதுவரை யாரும் திரையில் பேசவில்லை என்றும், அதை முதல் முறையாக 'பராசக்தி' படம் மூலம் தாங்கள் பேச முயல்கிறோம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பொங்கல் வெளியீடு குறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கும் ஆகாஷ் பாஸ்கரன் பதிலளித்துள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், படத்தை நான்கு நாட்கள் முன்பே வெளியிட வேண்டுமென கேட்டதாகவும், ஆனால் ஸ்கெஜுலிங் தொடர்பான பிரச்சனைகளால் அது சாத்தியமாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக இந்த படம் வருவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் சர்ச்சைகள் கிளப்பப்படுவதாகவும், ஆனால் பொங்கல் காலத்தில் இரண்டு பெரிய படங்கள் எளிதாக ஓடும் சக்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 'பராசக்தி' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்வார்கள் என்று வெளியான தகவல்களையும் ஆகாஷ் பாஸ்கரன் மறுத்துள்ளார். அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications