அரை பிஸ்கட் போதும்! ரஜினியோடு இணைவது பற்றி கமல்ஹாசன் சொன்ன தத்துவம்! மாற்றத்திற்கு காரணம் இதுதானா?
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும், கடந்த 46 ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை. ஆரம்பக்காலத்தில் 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'பதினாறு வயதினிலே' உள்ளிட்ட பல படங்களில் அவர்கள் ஒன்றாகத் தோன்றியிருந்தாலும், கடைசியாக 1979ஆம் ஆண்டு வெளியான 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில், ரஜினியும் கமலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதைப் பற்றி கமல் பேசியுள்ள கருத்துக்கள், சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகின்றன.
ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு
சமீபத்தில் துபாயில் நடந்த சைமா விருது விழாவில், கமல் இந்தப் படம் குறித்துப் பேசினார். "நாங்க இணைந்து ரொம்ப நாள் ஆச்சு, விரும்பி பிரிஞ்சு இருந்தோம். ஏன்னா, ஒரு பிஸ்கெட்டைப் பிரிச்சு ரெண்டு பேருக்குக் கொடுத்துட்டு இருந்தாங்க, ஆளுக்கொரு பிஸ்கெட் வேணும்னு ஆசைப்பட்டோம், அதை வாங்கி நல்லா சப்பிட்டோம். இப்போ மறுபடியும் அரை பிஸ்கெட் போதும்னு நினைக்கிறோம். அதனால் ஒன்றாக வருகிறோம்" என்று தனது வழக்கமான ஸ்டைலில் கமல் பேசியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், "எங்களுக்குள்ள போட்டி என்பது நீங்க (ரசிகர்கள்) ஏற்படுத்தினதுதான், ஆனா எங்களுக்கு அது போட்டியே கிடையாது. எப்போவே நடக்க வேண்டியது இப்பவாச்சும் நடக்குதே என்ற நிலைதான் எங்களுக்கு இருக்கிறது" என்றும் கூறினார்.
ப்ரோமோஷன் பில்டப்
இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, அதற்கான புரமோஷன்கள் பிரமிக்க வைக்கும் அளவிற்குப் பெரியதாக இருக்கும். ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் வெளியிடுவது, ஆடியோ லாஞ்சில் பெரிய பில்டப் கொடுப்பது எனப் பல கோடிகள் செலவு செய்கிறார்கள். ஆனால், இப்படிப் பெரிய அளவில் ஹைப் ஏற்றப்பட்டு புரமோஷன் செய்யப்படும் படங்கள் திரையில் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை.
கமல்ஹாசனின் இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்களுக்குப் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. ஆனால், கதை நன்றாக இல்லை என்றால், எவ்வளவு பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும், பெரிய அளவில் புரமோஷன் செய்தாலும் படம் ஓடாது என்பது இப்போது பலருக்கும் புரிந்திருக்கிறது.
அடக்கி வாசித்த கமல்
ரஜினியும் கமலும் இணையும் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணைத் தொடும் அளவிற்கு உள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், "நீங்களும் ரஜினியும் பல வருடங்களுக்குப் பிறகு இணைவது தரமான சம்பவமாக இருக்கும்" என்று கூறினார்.
அதற்குச் சுதாரித்த கமல், "ஒரு படம் தரமான சம்பவம் என ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். படம் வருவதற்கு முன்பு சம்பவம் தரமாக இருக்கும் என எப்படிச் சொல்ல முடியும்? சில நேரங்களில் மக்கள் தரதரவென இழுத்து விடுவார்கள். படத்தை நன்றாக எடுத்துவிட்டு காட்டுவோம். அவர்களுக்குப் பிடித்திருந்தால் மகிழ்ச்சி" என அடக்கி வாசித்திருக்கிறார். எது எப்படியோ இனியாவது இருவருடைய படங்களுக்கும் அதிகமாக பில்டப் செய்யாமல் ஆக்ஷனில் காட்டினால் சரிதான் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications