Coolie Upendra: 14 ஆண்டுகள் கழித்து நிறைவேறிய ரஜினி ஆசை! அப்படி உபேந்திரா என்னதான் சாதித்துவிட்டார்?
சென்னை: நடிகர் உபேந்திராவுடன் (காளிஷா/ Kaleesha) நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நடிக்க விரும்புவதாக நடிகர் ரஜினிகாந்த் சொல்லி 14 ஆண்டுகள் கழித்து தற்போது கூலியில் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் உபேந்திரா ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கூலி திரைப்படத்தில் உபேந்திராவும் ஒரு கூலியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பெற்றுவிட்டார். அவருக்கு இன்னும் கொஞ்சம் ஸ்கோப் கொடுத்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதுதான் படம் பார்த்தோரின் ஆலோசனையாக இருக்கிறது.

அந்த அளவுக்கு உப்பியும் (உபேந்திரா), சவுபினும் தங்கள் ஒட்டுமொத்த நடிப்பையும் கொட்டியுள்ளனர். கூலி படத்தில் யாருடைய நடிப்பும் மோசம் என சொல்லிவிட முடியாது. அவரவருக்கு கொடுத்த கேரக்டர்களை அவரவர் கச்சிதமாக செய்துள்ளனர்.
கூலி படத்தில் நடித்த பிறகு உபேந்திரா பெரிதும் பேசப்பட்டுள்ளார். அவர் யார் என்பதை பார்க்கலாம். பெங்களூரில் மஞ்சுநாத் ராவுக்கும் அனுசுயாவுக்கும் பிறந்தவர்தான் உப்பி. இவர் இரண்டாவது மகனாக பிறந்தார். உப்பியின் அண்ணன் சுதீந்திர ராவ், ராணுவ அதிகாரியாவார்.
உபேந்திரா, பெங்களூரில் உள்ள கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். இவர் தனது உறவினரும் படத் தயாரிப்பாளருமான காஷிநாத்துடன் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஜெக்கேஷ் எனும் காமெடி நடிகரை வைத்து "தார்லே நான் மகா" என்ற படத்தை 1992 ஆம் ஆண்டு உபேந்திராவும் இணைந்து இயக்கியிருந்தார். அதன் பிறகு ஹாரர் படமான "உஷ்" என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
1997ஆம் ஆண்டு "ஏ" எனும் படத்தில் உபேந்திரா நடிகர் அவதாரத்தையும் எடுத்திருந்தார். இந்த படம் 175 நாட்களுக்கு ஓடியது. இந்த படத்தின் மூலம் உபேந்திரா பிரபலமடைந்தார். பின்னர் "ஸ்வஸ்திக்" எனும் படத்திலும் நடித்திருந்தார்.
"உபேந்திரா" எனும் படத்திலும் நடிகர் உபேந்திரா நடித்திருந்தார். இந்த படத்தில் தாமினி, பிரேமா, பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்த படம் கர்நாடகாவில் 200 நாட்கள் ஓடியது.
10 ஆண்டுகள் கழித்து 2010ஆம் ஆண்டு உபேந்திரா, "சூப்பர்" என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸானது. கர்நாடகாவில் மட்டுமல்ல ஆந்திராவில் இது ரெக்கார்டு பிரேக்கர் படமாக மாறியது. இந்த படம் 175 நாட்கள் தியேட்டரில் ஓடி, வசூல் சாதனை படைத்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு பெங்களூரில் "சூப்பர்" என்ற படம் ரஜினிகாந்துக்காக திரையிடப்பட்டது. அவர் உபேந்திரா, தனது நண்பர்களுடன் படத்தை பார்த்தார். அப்போது ரஜினி கூறுகையில், "உபேந்திரா சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குநராகவும் உள்ளது.
இரண்டிலும் சிறப்பாக இருப்பது என்பது இந்திய சினிமாவில் சற்று கடினம்தான். யாரும் அப்படி நினைத்து பார்க்க மாட்டார்கள். ஆனால் உபேந்திரா, நடிப்பிலும் இயக்கத்திலும் அசத்தி வருகிறார். எனக்கு உபேந்திரா நடித்த, இயக்கிய படங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியிருக்கும் போது "சூப்பர்" மட்டும் விதிவிலக்கு இல்லை. நல்ல கதை களம் கிடைத்து எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், வருங்காலத்தில் உபேந்திராவுடன் நான் நடிக்க விரும்புகிறேன்" என ரஜினி தெரிவித்திருந்தார்.
ரஜினி சொல்லி 14 ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் உபேந்திரா இணைந்துள்ளார். ரஜினிதான் சூப்பர் ஸ்டார் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என எல்லா "வுட்"களும் சொன்னாலும் ரஜினி, பிற நடிகர்களிடம் திறமை இருந்தால் அவர்களை பாராட்டாமல் இருக்கவே மாட்டார். இதுதான் அவருடைய சிம்பிளிசிட்டி!












Click it and Unblock the Notifications