ஆர்பி சவுத்ரி பற்றி கண்கலங்க பேசிய ரஜினிகாந்த்.. இப்படியா நடக்கணும்? நொந்து போய் பேசிய அர்ஜுன்
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஆர்பி சவுத்ரியின் மறைவு, திரைத்துறையை முழுவதுமாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்து, பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அவரின் மறைவு, திரையுலகினருக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

பிரபலங்கள் இறுதி அஞ்சலி
அவரது உடலுக்கு நேற்று முதல் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் வந்து மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அஞ்சலி
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சென்று ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். ரஜினிகாந்தின் வருகையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களும் திரையுலகினரும் அவரை சுற்றி திரண்டதால் அந்த பகுதி உணர்ச்சிகரமான சூழலாக மாறியது.
ரஜினிகாந்த் பேச்சு
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "நான் அவருடைய படத்தில் நடித்தது இல்லை. ஆனால் அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். '99 படங்கள் தயாரித்துவிட்டேன்... 100வது படம் எடுத்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த 100வது படத்தில் நீங்க நடிக்கணும்' என்று என்னிடம் ஆசையாக கூறியிருந்தார்" என்று உருக்கமாக நினைவுகூர்ந்தார். ரஜினியின் இந்த பேச்சு அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
விஜய் தெரிவித்த வருத்தம்
இதற்கு முன்பாகவே, தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகரான விஜய் நேற்று இரவு நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். தற்போது அரசியல் ரீதியாக மிகப்பெரிய பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டு கொண்டிருந்தாலும், அனைத்து பணிகளையும் ஒதுக்கிவைத்து விஜய் நேரில் வந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.
அஞ்சலி செலுத்திய பிறகு, ஆர்.பி. சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜீவாவை விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அப்போது ஜீவா கதறி அழுத தருணம் அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அருகில் இருந்த பலரும் அந்த காட்சியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டனர்.
நடிகர்கள் அஞ்சலி
இதனிடையே நடிகர்கள் சிம்பு, விஷால் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் ஆர்.பி. சௌத்ரியுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்பி சவுத்ரியின் மறைவு பற்றி அர்ஜுன்
அதில் குறிப்பாக நடிகர் அர்ஜுன் பேசிய வார்த்தைகள் பலரையும் கலங்க வைத்துள்ளது. அவர் கண்கலங்கியபடி, "இது யாருக்கும் நடக்கக்கூடாதது. ஆர்பி சவுத்ரி சார் தயாரிப்பில் நான் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்ப எளிமையான மனிதர். யாரிடமும் கோபமாக கூட பேச மாட்டார். எல்லாரையும் மரியாதையோடு நடத்துவார். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கவே கூடாது" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
ஆர்.பி. சௌத்ரி தமிழ் சினிமாவில் சாதாரண தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், பல புதுமுக இயக்குநர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். விக்ரமன், கே எஸ் ரவிக்குமார், எழில், பேரரசு சசிகுமார், லிங்குசாமி உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை வளர்த்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அவரது மறைவு காரணமாக தமிழ் திரையுலகம் தற்போது பெரும் துக்கத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து பல திரை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருவதால், அவரது திரையுலக பயணம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் தெளிவாக தெரிகிறது. ஆர்.பி. சௌத்ரியின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.













Click it and Unblock the Notifications