சரிகமபவில் மாணவி தர்ஷினி சொன்ன வார்த்தை.. ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு! மகிழ்ச்சியில் ஊர் மக்கள்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4.
அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் தர்ஷினி. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மனப்பாக்கம் என்பது தான் இவருடைய கிராமம். 60 முதல் 70 குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் தற்போது வரை பஸ் வசதி இல்லை என்பது பெரிய குறை.
பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
இதை தொடர்ந்து ஜீ தமிழின் சரிகமப குழுவினர் தர்ஷினியின் ஊருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.. இதன் மூலமாக அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஜீ தமிழின் சரிகமப குழுவினர் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது தமிழக அரசு.

ஆமாம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் டிசம்பர் 5-ம் தேதியான இன்று தர்ஷினியின் சொந்த ஊரான அம்மனப்பாக்கத்தில் கொடி அசைத்து பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ளது.
தர்ஷினியின் மூலமாகவும் ஜீ தமிழின் சரிகமப குழுவினர் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை மூலமாகவும் தங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக அம்மனப்பாக்கம் கிராம மக்கள் நன்றி கூறி வருகின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் ஜீ தமிழின் சரிகமப குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications