ராவுத்தரை "பப்பா பப்பா"னுதான் கூப்பிடுவோம்! உறவில் விரிசல் ஏன்? விஜயகாந்த் மகன் உருக்கம்!
சென்னை: ராவுத்தரும் எங்களுக்கு இன்னொரு அப்பா மாதிரிதான் என விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சண்முகபாண்டியன் மேலும் கூறியிருப்பதாவது: நாங்க சின்ன வயசுல இருந்தே இவரை பப்பா என்றுதான் கூப்பிடுவோம். அது ஏன்னு தெரியலை. ஆனால் குழந்தையிலிருந்தே இப்ராஹிம் பப்பா என்றுதான் அழைப்போம்.

எங்களுக்கு அவர் இன்னொரு அப்பா மாதிரி. அப்பா எங்க இருக்காரோ அங்க அவர் இருப்பாரு. அப்பா ரொம்ப பிஸியா இருந்தா இவரைதான் நாங்த ஏதாவது வேணும்னா கேட்போம். இவருடைய பையன் அபு, அவரும் எங்க கூடதான் சின்ன வயசுல இருந்து இருப்பாரு.
அதுக்கப்புறம் ஒரு சில பிரச்சினைகளால் நாங்க பிரிஞ்சதுக்கு அப்பறம் நாங்கள் பார்த்துக்கவே இல்லை. இந்த மாதிரி ஒரு நட்பை நாங்கள் பார்த்ததில்லை என மிகவும் உருக்கமாக சண்முகபாண்டியன் தெரிவித்தார்.
விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில் இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பினார். தான் நடிக்கும் படங்களின் கதை தேர்வு தொடங்கி, தயாரிப்பது, பணத்தை வாங்குவது, படத்தை இறுதி செய்வது என மொத்த அதிகாரத்தையும் ராவுத்தருக்குத்தான் விஜயகாந்த் வழங்கியிருந்தார்.
விஜயகாந்திடம் சொல்ல வேண்டியதை ராவுத்தரிடம் சொன்னால் போதும் என்ற அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது நட்பு கள்ளம் கபடமில்லாத , சூது வாது இல்லாததது. விஜயகாந்த் தன்னை நம்புவதால் அவர் முகம் சுளிக்கும் முடிவுகளை எப்போதுமே ராவுத்தர் எடுத்ததில்லை.
அது போல் தன் நண்பன் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என விஜயகாந்தும் நம்பினார். இவர்களுக்குள் இருந்தது நேர்மையான நட்பு. ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ், ஐ.வி. சினி புரொடெக்ஷன்ஸ் என்ற பேனர்களில் திரைப்படங்களை ராவுத்தர் தயாரித்தார்.
இந்த 3 பேனர்களிலுமே விஜயகாந்த் நடித்த படங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்தன. 1991 ஆம் ஆண்டு விஜயகாந்தின் 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன் சிறப்பாக ஓடியது. விஜயகாந்த் ஹீரோவாக நடிக்காத படங்களையும் ராவுத்தர் தயாரித்திருந்தார்.
90 களின் பிற்பகுதியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் ராவுத்தர் இருந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடு காரணமாக ராவுத்தர் , விஜயகாந்துடன் பிரிந்து சென்றுவிட்டார்.
2015 ஆம் ஆண்டு ராவுத்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது விஜயகாந்த் அவரை தினமும் சென்று மருத்துவமனையில் பார்த்தார். ராவுத்தர் சுயநினைவை இழந்து இருந்த போது ராவுத்தருக்கும் தனக்கும் இடையிலான நட்பு குறித்து விஜயகாந்த் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பெரிய கடிதத்தில் நண்பா மீண்டு வா, எழுந்து வா என விஜயகாந்த் எழுதியிருந்தார். நட்புக்கு இலக்கணமாக ராவுத்தரும் விஜயகாந்தும் இருந்தனர்.












Click it and Unblock the Notifications