மாற்றம் வருமா? ஓட்டு போட்ட பிறகு சிவகார்த்திகேயன் ஒரே வார்த்தையில் பதில்!
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் சென்னை விருகம்பாக்கம்/வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வந்து வாக்களித்தார். வழக்கம்போலவே அதிகாலையிலேயே வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

சிவகார்த்திகேயன் பேட்டி
வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்களுக்கு சில வேண்டுகோள் வைத்திருந்தார். "'அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்' என்று புரட்சியாளர் Lenin சொல்கிறார். நாம் அரசியலில் தலையிடுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் வாக்களிப்பது தான். அது ஜனநாயகக் கடமை, பொறுப்பு என்று சொல்லலாம். அதை நிறைவேற்றுவதற்காக வந்து நான் வாக்களித்துவிட்டேன்.
இன்றைய நாள் ஓய்வு நாள் என்று நினைக்காமல், உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்று நினையுங்கள். மற்ற நாட்களை விட இன்றைய நாள் முக்கியமானது. அதனால் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். அதை எல்லோரும் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.
ஓட்டு என்கிற ஒரு விஷயம் மட்டும்தான் நாம் அனைவருக்கும் கிடைக்கும் சமமான ஒன்று. ஏழையாக இருந்தாலும் ஒரு ஓட்டுதான், பணக்காரராக இருந்தாலும் ஒரு ஓட்டுதான். பணக்காரர்களுக்கு இரண்டு ஓட்டு, ஏழைகளுக்கு ஒரு ஓட்டு என்று எதுவும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே ஒரு ஓட்டுதான். அதுவே நம்முடைய பலம்.
கடமை
நான் எப்போதும் காலையிலேயே வந்து வாக்களித்து விடுவேன். ஒரே ஒரு முறை மட்டும் படப்பிடிப்பு காரணமாக தாமதமானது. வேட்பாளர்கள் யார், யார் என்று தெரிந்துகொண்டுதான் வாக்களிக்க வந்தேன். என் கடமையை சரியாகச் செய்திருக்கிறேன்.
மிகவும் எக்சைட்டிங்கான தேர்தலாக இது இருக்கிறது. இந்தத் தேர்தலில்தான் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க நானும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறினார்.
மாற்றம் வருமா?
மேலும் "மாற்றம் தேவையா?" என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றது, "அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்காகத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது" என்று சுருக்கமாக பதிலளித்தார்.
காலை முதலே தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்களின் இந்த வகையான விழிப்புணர்வு கருத்துகள், வாக்குப்பதிவில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கிறது.
மொத்தத்தில், வாக்கு என்பது ஒரு உரிமை மட்டும் அல்ல சமத்துவத்தின் அடையாளமும், ஜனநாயகத்தின் வலிமையும் என்பதை சிவகார்த்திகேயன் எடுத்து சொல்லி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தன்னுடைய ரசிகர்கள் யாருக்கு வேணாலும் ஓட்டு போடுங்க ஆனால் கண்டிப்பாக ஓட்டு மட்டும் போட்டுடுங்க என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.













Click it and Unblock the Notifications