பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள்
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை தொட்ட பாடகி சுஜாதா மோகன் குறித்து வெளிவந்துள்ள சமீபத்திய தகவல்கள் ரசிகர்களை உண்மையிலேயே கலங்க வைத்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு வந்த சுஜாதா மோகன், கடந்த 5 ஆண்டுகளாக பாடவில்லை என்ற உண்மையை பகிர்ந்தார். "எனக்கு தொண்டையில் பிரச்சனை... அதனால் பழைய மாதிரி பாட முடியவில்லை" என்ற அவரது வார்த்தைகள் அங்கே இருந்தவர்களை மட்டுமல்ல, இந்த செய்தியை கேட்ட அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
ஒரு காலத்தில் தினமும் மேடைகளில் பாடி கொண்டிருந்த அந்த குரல் இப்போது அமைதியாகி இருப்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது.

ரிஹானாவின் உருக்கமான வேண்டுகோள்
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரிஹானா, சுஜாதா மோகனை பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது,"என்னுடைய அம்மா இப்போ இருந்திருந்தா, சுஜாதாவுக்காக பிரேயர் பண்ணி கண்டிப்பா சரி பண்ணியிருப்பாங்க... அவர்களுக்கு சுஜாதா மீது அவ்வளவு பாசம். இந்த வீடியோவை பார்க்கும் டாக்டர்கள் யாராவது இருந்தா தயவு செய்து சுஜாதாவுக்கு உதவுங்க... அவருக்கு தொண்டையில் கஷ்டம் இருக்கு... அந்த குரல் மீண்டும் வரணும். ஆமா அவருடைய பாடல்களை மீண்டும் கேட்கணும்" என்று உருக்கமாக அவர் பேச, அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்களின் மனதை உடைத்துவிட்டது.
கோரஸ் பாடிய அனுபவம்
ரிஹானா தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்."நான் முதல் முறையாக சுஜாதாவுடன் கோரஸ் பாடினேன். அப்போ எனக்கு சரியாக பாடவே தெரியாது. ஆனாலும் அவரைப் பார்த்து தான் நான் கற்றுக்கொண்டேன். அவரோட குரல், அவரோட அர்ப்பணிப்பு - அது ஒரு பள்ளி மாதிரி." என்று பழைய நினைவுகளையும் ரிஹானா பகிர்ந்து கொண்டார்.
இந்த நினைவுகள் சுஜாதா மோகனின் இசை பயணம் எவ்வளவு பேரை பாதித்திருக்கிறது என்பதற்கே சாட்சி என்று பலர் ஃபீல் பண்ணி கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்
பாடகி சுஜாதா மோகன் ஹிட் பாடல்கள்
சுஜாதா மோகன் என்ற பெயர் கேட்டாலே நமக்கு நினைவுக்கு வரும் பல ஹிட் பாடல்கள் இருக்கின்றன.
"புது வெள்ளை மழை", "நெஞ்சுக்குள் போதும்", "மலர்களே மலர்களே", "அன்பில் அவன்", "என்னை கொஞ்சம் மாற்றி"... இப்படியாக எண்ணற்ற பாடல்கள் இன்று கூட ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகில் பயணம் செய்த அவர், 20,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். மென்மையான குரல், தெளிவான உச்சரிப்பு, எமோஷனலோ சந்தோஷமோ எந்த உணர்வுகளாக இருந்தாலும் அதை நேராக இதயத்துக்குள் கொண்டு செல்லும் திறன் - இதுவே அவரின் அடையாளம்.
ரசிகர்களின் ஒரே ஆசை
இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒரே கோரிக்கையை முன்வைக்கிறார்கள். "அந்த குரல் மீண்டும் கேட்கணும்... சுஜாதா அம்மா மீண்டும் மேடைக்கு வரணும்..." அவர் பழையபடி பாட வேண்டும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வர வேண்டும் என்று பலர் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள்
எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் சுஜாதா மோகன் மீண்டும் குணமடைந்து, பழைய உற்சாகத்துடன் மேடைக்கு திரும்ப வேண்டும்.. இதுதான் ரசிகர்களின் உண்மையான பிரார்த்தனை.












Click it and Unblock the Notifications