ரிதன்யாவை அசிங்கமா பேசறாங்க.. தலைமை செயலகத்துக்கு ஓடிவந்த திருப்பூர் அப்பா.. 300 சவரன் போட்டும்கூட?
சென்னை: திருப்பூர் மாவட்ட அவிநாசியில் நடந்த வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியெடுத்தது.. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. ஆனாலும், "சந்தேக மரணம் என்று மட்டுமே போலீசார் பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ரிதன்யா குடும்பத்தினர் விடுத்துள்ளனர். இது தொடர்பாக உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தந்துள்ளார்.
ரிதன்யாவை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி, அவரை தற்கொலை வரை கொண்டு சென்றுவிட்டுவிட்டனர் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகிய மூன்று பேரும்...

ஹைகோர்ட்டில் தாக்கல்
இவர்கள் 3 பேருமே கைதாகியிருக்கும் நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால், நீதிமன்றம் இதுவரை ஜாமீனை தரவில்லை.. நீதிமன்றத்தின் செயல்பாடுகள் ஆறுதலை தந்தாலும், ரிதன்யாவின் வழக்கு மெத்தனமாக நடப்பதாக, ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம், இதுகுறித்து வழக்கறிஞர் தரப்பில் சொன்னபோது, "குற்றவாளிகள் இந்த வழக்கில் தப்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நியாயமான சில கால அவகாசத்தை எடுத்து கொள்கிறார்கள்.. காரணம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு காலதாமதமாகிறது" என்று கூறியிருந்தனர்.
தாத்தாவின் அதிகார பலம்
ஆனால், கவினின் தாத்தா, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளதால், பணவசதி, அதிகார பலமும் உள்ளதால், விசாரணை தாமதமாகிறதா? என்றும் சோஷியல் மீடியாவில் பலரும் கேள்விகளை எழுப்பினார்கள்..
அதேபோல, விசாரணை தாமதமாவது ஏன் என்ற கேள்வியை ரிதன்யா குடும்பத்தினரே வலுவாக முன்வைத்து வருகிறார்கள்.. ரிதன்யா இறந்த ஒரு வாரத்தில் செய்தியாளர்களிடம் ரிதன்யாவின் அப்பா பேசியிருந்தார்.
கண்ணீர் வேதனை
அப்போது, "ரிதன்யாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யும்வரை போலீஸார் விசாரணை முறையாக நடந்தது... அரசியல் அழுத்தங்கள் அரசியல் அழுத்தங்களால் இந்த வழக்கை கிடப்பில் போடுவதற்கான முகாந்திரங்கள் நிறைய உள்ளதால், மகளின் உயிரிழப்பில் உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும்.. போலீஸார் விசாரணை, ஆர்டிஓ விசாரணையில் நியாயம் கிடைக்குமா என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
இதோ ரிதன்யா இறந்து இத்தனை நாளாகியும், வழக்கின் விசாரணை மந்தமாக இருப்பதாக மீண்டும் ரிதன்யாவின் அப்பா, ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.. இன்றைய தினம், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகாரும் தந்துள்ளார்.. அத்துடன், சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
அசிங்கமா பேசறாங்க
பிறகு செய்தியாளர்களிடம் ரிதன்யாவின் அப்பா பேசும்போது, "பெண் இறந்ததற்கு சாதாரண வழக்கைதான் பதிவு செய்துள்ளனர்.. என்னுடைய பெண் இறக்கும் முன்பு, ஆடியோவில் எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்..
ஆனால், இதுவரை எந்தவிதமான உட்பிரிவுகளும் பதியவில்லை.. எனவே, அது சம்பந்தமான செக்ஷன்களை பதிய வேண்டும்.. இது தொடர்பாகவே முதல்வரின் தனிப்பிரிவில் மனுவாக தந்துள்ளோம்.
சித்தரிப்புகள் - தவறான பதிவுகள்
சோஷியல் மீடியாவில் என்னுடைய பெண்ணை பற்றி தவறான சித்தரிப்புகளை இப்போதே துவங்கிவிட்டனர். என் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கக்கூடாது என்பதற்காக தவறான தகவல்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்..
தயவுசெய்து எந்த சூழ்நிலையிலும் தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்.. என்னுடைய பெண்ணுக்காக மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களுக்கும் சேர்த்துதான், நான் போராடிட்டு இருக்கிறேன்.. என்னுடைய பெண்ணின் மரணமே, இறுதி மரணமாக இருக்க வேண்டும். எல்லா பெண்களை பெற்ற தகப்பன்களும், இதை புரிந்து கொள்ள வேண்டும்.. எந்த தவறான செய்திகளையும் பரப்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications