நெப்போலியனின் மருத்துவமனையில் அதிசயம்.. வாழ்க்கையில் மறக்க முடியாது! வில்லேஜ் குக்கிங் தாத்தா எமோஷனல்
சென்னை: யூடியூப்பில் வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற பெயரில் தாத்தா பெரிய தம்பியும் அவருடைய உறவினர்களும் சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தாத்தா பெரிய தம்பி நடிகர் நெப்போலியன் கட்டிய மயோபதி மருத்துவமனையில் நடந்த ஒரு அதிசயத்தை வீடியோ ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதை என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று எமோஷனல் ஆகவும் பேசி இருக்கிறார்.
தற்போதைய அவசர காலகட்டத்தில் இணையத்தின் பயன்பாடு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே எல்லா தகவல்களையும் இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் உலகம் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிலும் youtube பக்கத்தில் பலர் தங்களுடைய திறமைகளை காட்டி பிரபலங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் தங்களுக்குப் பிடித்த சுவையான பல உணவுப் பொருள்களை விதவிதமாக சமைப்பது எப்படி? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாக சமைப்பது எப்படி? என்று பல youtube சேனல்களில் சமையல் குறிப்புகளை அள்ளி தெளிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அதில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த அதில் ஒன்று தான் வில்லேஜ் குக்கிங் youtube சேனலும். இந்த சேனலுக்கு 2.4 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.
வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி வழிநடத்தி வருகிறார். இவர்களுடைய ஜாலியான அரட்டை மட்டுமல்ல செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய், மங்களகரமாக மஞ்சள் என ஒவ்வொரு பொருள்களையும் அறிமுகப்படுத்தி இவர்கள் சமையலில் சேர்க்கும் விதம் கிராமத்து மணம் வீசும் இவர்களுடைய பேச்சு என்று பல விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து இருக்கின்றது.
தனக்கு வயதானாலும் வேட்டியை மடித்து கட்டி கொண்டு பெரிய தம்பி தாத்தா செய்யும் சமையல் பார்ப்போரை வியக்க வைக்கும். அதிலும் "இன்னைக்கு ஒரு புடி" என்ற டயலாக் பெரிய அளவில் இவருக்கு பேமஸ். இதற்கே இவருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு அதிலிருந்து குணமாகி இப்போது மீண்டும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவில் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார். அதாவது கடந்த ஜனவரி மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மயோபதி மருத்துவமனைக்கு தாத்தாவும் அவருடைய யூடியூபர் பிரபலங்களும் போயிருக்கிறார்கள்.
ஏற்கனவே இவர்கள் சமையல் செய்து பல ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனை போன்றவற்றிற்கு கொடுத்து வருகிறார்கள். அதுபோல இவர்கள் மயோபதி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். அந்த மயோபதி மருத்துவமனை நடிகர் நெப்போலியனால் கட்டப்பட்டது தான்.

நெப்போலியனின் மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை செய்திருந்தும் அதில் பெரிய அளவில் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடையாமல் இருந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள வீரவநல்லூரில் பாரம்பரிய முறைப்படி இந்த நோய்க்கு மருத்துவம் பார்ப்பதாக கேள்விப்பட்டு அங்கு நெப்போலியன் சென்றிருந்த நிலையில் அவருடைய மகனுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த மருத்துவமனையில் சரியாக தங்கும் வசதி இல்லாததால் நெப்போலியன் தன்னுடைய வீட்டில் வைத்து தன்னுடைய மகனுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார். ஆனால் நெப்போலியனின் மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதும் அதற்கு திருநெல்வேலியில் மருத்துவம் பார்ப்பதும் கேள்விப்பட்ட பல மக்கள் அங்கு வந்து தங்கள் குழந்தைகளுக்கும் சிகிச்சை பார்க்க வேண்டும் என்று பலர் கண்ணீரோடு வேண்டி இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் மத்திய அமைச்சராக இருந்த நெப்போலியன் திருநெல்வேலியில் மயோபதி மருத்துவமனையை பலருடைய முயற்சியால் கட்டி முடித்து இருக்கிறார். இந்த மருத்துவமனைக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பல நாட்டிலிருந்தும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து மருத்துவம் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு தான் தாத்தா பெரிய தம்பியும் சென்று இருக்கிறார்.
அப்போது அங்கு நடந்த விஷயத்தை பற்றி பெரிய தம்பி தாத்தா பேசுகையில், மயோபதி மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிடா வெட்டி விருந்து வைப்பதற்காக சென்றிருக்கிறார். விருந்து முடிந்ததும் அங்கு பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பத்து வயது பையனை அவருடைய அப்பா தோளில் தூக்கி போட்டு கொண்டு வந்தார். அந்த பையனால் நடக்க முடியாமல் இருந்திருக்கிறது. அந்தப் பையனின் தந்தை அங்கிருந்த டாக்டரிடம் என் பையனை நான் தாய் இல்லாமல் வளர்த்துட்டு இருக்கிறேன் சார்... என் பையனை நடக்க வச்சு பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு... அவனை நடக்க வச்சுட்டா போதும் சார் என்று கண் கலங்கிட்டாரு.
அதை பார்த்து எனக்கு வருத்தமா இருந்தது. அப்போ நான் அந்த ஐயாவிடம் ஐயா கவலைப்படாதீங்க உங்க பையன் இன்னும் அஞ்சு ஆறு மாசத்துல நடந்துருவான்... கடவுள் இருக்காரு காப்பாற்றுவார் என்று சொல்லிட்டு வந்தேன். அதற்குப் பிறகு ஐந்து மாதங்கள் கழித்து எனக்கு மயோபதி மருத்துவமனையில் இருந்து ஒரு போன் வந்தது... ஐயா ரோஹித் நடந்துட்டான்யா என்று சொன்னாங்க எனக்கு சந்தோசம் தாங்கல. உடனே திருநெல்வேலிக்கு நேரடியா போயிட்டேன். பையன் அழகு போல இப்போ நடக்குறான்.
அதைப் பார்த்து எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. நீ நூறு வருஷம் வாழணும்டாஎன்று அந்தப் பையனை வாழ்த்திட்டு, அங்க பல பேரின் "நடக்கும் கனவை" நிறைவேற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் டேனியல் அவர்களையும் வாழ்த்திட்டு வந்தேன். என்னுடைய வாழ்க்கையிலேயே இது மறக்க முடியாத சம்பவமா மாறிட்டு என்று அந்த வீடியோவில் தாத்தா பெரிய தம்பி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications