கேரளாவில் பரவும் புதிய காய்ச்சல்... 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குகிறது... பெற்றோர்களே உஷார்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக தாக்கியது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. சில வாரங்களாக டெல்லி உள்பட சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது.
இப்படி கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தான் கேரளாவில் புதிய வகை காய்ச்சல் ஒன்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
சென்னையில் வீடு தேடி வரும் சிலிப்.. கொரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தும் மாநகராட்சி
தக்காளி காய்ச்சல் பரவல்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சில நாட்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தக்காளி காய்ச்சல் எனும் புதிய வகை காய்ச்சலால் அவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்...
கொல்லம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் நெடுவாத்தூர், அஞ்சல், ஆரியங்காவு பகுதிகளில் தான் அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காய்ச்சலானது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தான் தாக்குகிறது. இதனால் கிராமங்கள், அங்கன்வாடிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளி காய்ச்சல் பரவலை தடுக்க பல இடங்களில் அங்கன்வாடி மையங்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
அறிகுறிகள் என்ன?
இந்த காய்ச்சலுக்கு சில அறிகுறிகள் உள்ளன. தொடர்ந்து அதிகப்படியான காய்ச்சல், உடல் சோர்வு, வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், மூட்டு வலி உள்ளிட்டவை அறிகுறிகளாக உள்ளன. மேலும் இந்த காய்ச்சலால் வாய் எரிச்சல் ஏற்படும். இதன்மூலம் குழந்தைகளை உணவு எடுத்து கொள்ள முடியாத நிலை உருவாகும் எனவும் சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.
தடுப்பு நடவடிக்கை என்ன?
இந்த தக்காளி காய்ச்சல் என்பது வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல் தான். இது ஆபத்து இல்லை என்றாலும் கூட நாம் கவனமாக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் கொதிக்க வைத்த நீரை அதிகமாக பருக வேண்டும். அதேநேரத்தில் தக்காளி காய்ச்சல் ஏற்பட்டால் உருவாகும் கொப்புளங்களை வெடிக்க செய்யக்கூடாது. மேலும் காய்ச்சல் பாதித்தவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடக்கூடாது. பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளாமல் இருப்பதோடு, அவர் சுகாதாரமாக இருக்க வழிவகை செய்ய வேண்டும்.