கோவில் பிரச்சினையில் அரசு மூக்கை நீட்டக்கூடாது.. கேரளாவில் சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த அமித்ஷா!
திருவனந்தபுரம்: இடதுசாரி அரசுகள், காங்கிரஸ் அரசுகள் கேரளாவை தலைகீழாக மாற்றி விட்டன. அதாவது கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
போலீஸ் சீருடை அணிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சபரிமலை பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
கேரளாவில் தேர்தல்
அங்கு ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. ஏதாவது அதிசயம் நிகழத்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கி உள்ளது.
அமித்ஷா பேச்சு
சில மாதங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்ததை போல அதிக இடங்களை கைப்பற்றியது இடதுசாரி கூட்டணி. கருத்துகணிப்புகள் மீண்டும் இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. இதனால் கொரோனாவுக்கு மத்தியிலும் அங்கு பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
கேரளா ஊழலின் மையம்
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் கேரள மாநிலம் ஒரு காலத்தில் சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கருதப்பட்டது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாகவும், அமைதியை மிகவும் நேசிக்கும் மாநிலமாகவும் திகழ்ந்தது. ஆனால் இடதுசாரி அரசுகள், காங்கிரஸ் அரசுகள் கேரளாவை தலைகீழாக மாற்றி விட்டன. அதாவது கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன என்று அமித்ஷா கூறினார்.
சபரிமலை விவகாரம்
மேலும் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசிய அமித்ஷா கூறுகையில், 'போலீஸ் சீருடை அணிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சபரிமலை பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். கோவில்கள் தொடர்பான பிரச்சனைகளில் அரசாங்கங்கள் தலையிடக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். கோவில் பிரச்சனைகளை பக்தர்கள் வசம் விட்டுவிட வேண்டும் என்று கூறினார்.