உச்சநீதிமன்றம் வெளுத்தது சாருக்கு கேட்கலையோ? கேரளா ஆளுநர் ஆரிப்கான் என்னவெல்லாம் சொல்றாரு பாருங்க!
திருவனந்தபுரம்: கேரளா மாநில பல்கலைக் கழகங்கள் மசோதா அல்லது நிதி மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் நிறைவேற்றவே முடியாது என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், தமிழ்நாடு மாநில அரசுகள் ஆளுநர்களான பன்வாரிலால் புரோஹித், ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ஆளுநர்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தது.

மசோதாக்களை நிறுத்த முடியாது: தமிழ்நாடு அரசின் வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மாநில ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால் அதே மசோதாவை சட்டசபை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் ஒப்புதல் வழங்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என தெரிவித்தது.
நெருப்புடன் விளையாடும் பஞ்சாப் ஆளுநர்: பஞ்சாப் மாநில அரசின் வழக்கில், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெருப்புடன் விளையாடுகிறார். பஞ்சாப் மாநில அரசு சட்டசபையை கூட்டியது செல்லுமா? செல்லாதா? என்கிற கவலை ஆளுநருக்கு எதற்கு? ஒரு ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் பெயரளவுக்கு நியமிக்கப்படும் ஒரு மாநிலத்தின் தலைவர் அவ்வளவுதான். பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றிய நிதி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத்தான் வேண்டும் என தெரிவித்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்.
கேரளா ஆளுநர் கருத்து: இதேபோல கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தமக்கு எதிரான வழக்கு குறித்து கேரளா ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறியதாவது: கேரளா அரசுக்கும் எனக்கும் எந்த வித மோதலுமே இல்லை. அரசியல் சாசனம் என்ன சொல்கிறதே அதைத்தான் செய்கிறேன். பல்கலைக் கழக மசோதா அல்லது நிதி மசோதா ஆகியவை ஒரு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் நிறைவேற்றவே முடியாது. இவ்வாறு கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications