மிரட்டும் "13 பூனைகள்".. கேரளாவில் தொற்று அதிகரிக்க இவைதான் காரணமா.. கலக்கத்தில் வயநாடு மக்கள்
வயநாட்டில் பூனைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன
திருவனந்தபுரம்: கேரளாவில் தொற்று அதிகமாகி வருகிறது.. 2வது அலை அடிக்க போகிறது என்று பேசப்பட்டு வரும் நிலையில், 13 பூனைகள் இறந்துள்ளது மேலும் கிலியை தந்து வருகிறது!
மிக குறைந்த நாட்களில்.. கொரோனாவை ஒழித்துகட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்தது கேரள அரசு.. இதற்கு காரணம் அவர்களது சரியான திட்டமிடல், தலைவர்களின் கூட்டு முயற்சி, மக்களின் ஒத்துழைப்பு என்று இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நாட்டிற்கே கேரளா முன்மாதிரி என்று பாராட்டப்பட்ட நிலையில், கேரளாவின் வழிமுறைகளை தமிழக அரசும் பின்பற்ற தொடங்கி உள்ள நிலையில் அம்மாநிலத்தில் திரும்பவும் தொற்று எண்ணிக்கை ஆரம்பமாகி உள்ளது.
வெளிநாடு
இதை நேற்று பினராயி விஜயனும் உறுதி செய்திருந்தார். "கேரளத்தில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது... இவற்றில் 12 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்... மொத்தம் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் கண்ணூரில் 10 பேர், பாலக்காட்டில் 4 பேர், காசர்கோட்டில் 3 பேர், மலப்புரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் என 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறினார்.
அசால்ட்
எதனால் திடீரென கேரளாவில் இத்தனை பேர் பாதிப்பு என தெரியவில்லை.. ஊரடங்கை தளர்த்தியதால் அசால்ட்டாக இருந்துவிட்டார்கள் என்கிறது ஒரு தரப்பு.. ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும் கொரோனா பீதியால் பாலக்காடு உட்பட பல இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியே வரவில்லை என்கிறது ஒரு தரப்பு.. இதனிடையே வயநாட்டில் பூனைகள் மிரட்டி வருகின்றன.
இறப்பு விகிதம்
நிறைய பூனைகள் கேரள மாநிலத்தில் தொடர்ந்து மரணமடைந்து வருவது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மனந்தவடி, மேப்படி பகுதிகளில் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.. இந்தப் பகுதியில் கடந்த சில நாளில் மட்டும் 13 பூனைகள் இறந்துள்ளன.. இதனால் பதறி போன மக்களில் சிலர் விலங்குகள் நல துறையினரிடம் புகாரும் அளித்தனர். அதனடிப்படையில், அவர்களும் விரைந்து வந்து இறந்து போன பூனைகளின் ரத்த மாதிரியை டெஸ்ட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பயப்பட வேண்டாம்
இதை பற்றி விலங்குகளுக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் சொல்லும்போது, ஃபெலின் பார்வோ என்னும் வைரஸ் தொற்று காரணமாகத்தான் பூனைகள் மரணம் அதிகரித்து வருகின்றன... இதனை சரிசெய்ய ஏற்கனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்த வைரஸ் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது.. அதனால் யாருமே பயப்பட தேவையில்லை" என்றார். எனினும் தொற்று எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பூனைகளின் இறப்பும் அதிகமாகி வருவதால் மக்கள் லேசான அச்ச நிலையிலே உள்ளதாக கூறப்படுகிறது