யானைக்கு கூட தெரிஞ்சிருக்கு பாருங்க.. வயநாட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
வயநாடு: கேரளத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள வயநாடு மாவட்டம் கடந்த 30ம் தேதி வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.
தொடர்ந்து, இன்று 4வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 310க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் அப்பகுதி மக்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பலரும் நீரால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். சிலர் வனப் பகுதிக்குள் சென்று மரங்களைப் பிடித்துக் கொண்டும், பாதுகாப்பான இடங்களுக்கும் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இந்நிலையில், நிலச்சரிவில் இருந்து தனது பிள்ளையுடன் மீண்ட ஒரு பெண்ணுக்கு யானைகள் பாதுகாப்பாக நின்று, கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண் கூறியதாவது: நிலச்சரிவு ஏற்பட்டதும் கடுமையான பாதிப்போடு என் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு ஒரு மரத்திற்கு அடியில் சென்றுவிட்டேன். நள்ளிரவு 1 மணியில் இருந்து கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எங்களின் அருகில் மூன்று காட்டு யானைகளும் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு யானை காதுகளை ஆட்டியபடி எங்களைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. அப்போது, நான் அதைப் பார்த்து பெரிய துன்பத்துக்குப் பிறகு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். யாராவது எங்களை வந்து காப்பாற்றும் வரை எங்களை ஒன்றும் செய்துவிடாதே எனக் கேட்டு கதறினேன்.
காலை 6 மணியளவில் காபி தோட்டத்தில் இருந்து மீட்க வந்தவர்களின் குரல் கேட்டது. நாங்கள் அப்பகுதியில் இருந்து செல்லும்வரை அந்த யானை எந்த உணவையும் சாப்பிடாமல் எங்கள் அருகிலேயே அழுதுகொண்டே நின்றது. எங்களை ஒன்றுமே செய்யவில்லை என்று கண்ணீர் மல்க தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். யானை கூட பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பரிதாபப்பட்டுள்ளதே தவிர அவர்களை தாக்கவில்லை. இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications