நாட்டின் வெறுப்புணர்வுக்கு நுபுர்சர்மா மட்டுமல்ல பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்சும் காரணம்! ராகுல் சாடல்
திருவனந்தபுரம்: ‛‛நாட்டில் கோபம், வெறுப்பு சூழ்நிலைக்கு ஒருநபர் (நுபுர் சர்மா) மட்டுமே காரணம் இல்லை. இதற்கு பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், பாஜக, ஆர்எஸ்எஸ் தான் காரணம்'' என ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.
Recommended Video
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இது இஸ்லாமிய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
நுபுர் ஷர்மா குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து.. பாஜகவை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது.. காங்கிரஸ்!
உச்சநீதிமன்றத்தை அணுகிய நுபுர் சர்மா
இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகின. சில நாட்களுக்கு முன்பு நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் கண்ணையா லால் என்பவர் 2 பேரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே நுபுர் சர்மா மீது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில போலீஸ் நிலையங்களில் இருந்து விசாரணைக்கு ஆஜராககோரி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது உயிருக்கு மிரட்டல் இருப்பதால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
நுபுர் சர்மாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நுபுர் சர்மாவின் பேச்சை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. நுபுர் சர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. நாடு எரிவதற்கு தனியாளாக நுபுர்சர்மா தான் காரணம். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா இல்லை அவரால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் நுபுர் சர்மா தனது காலதாமதமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விஷயத்தில் நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியது. மேலும் நுபுர் சர்மாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
ராகுல்காந்தி பேச்சு
இந்நிலையில் ராகுல்காந்தி தனது மக்களவை தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டுக்கு சென்றார். அங்கு அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் நுபுர் சர்மாவின் பெயரை குறிப்பிடாமல் அவரது பேச்சுக்கு மத்திய அரசு, பிரதமர் மத்திய உள்துறை அமைச்சர் தான் காரணம் என குற்றம்சாட்டினார். இதுபற்றி ராகுல்காந்தி பேசினார்.
மத்திய அரசும் காரணம்
அப்போது அவர் கூறுகையில், ‛‛நாட்டில் கோபம் மற்றும் வெறுப்பு சூழ்நிலை குறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு மத்திய அரசு தான் காரணம். ஏனென்றால் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர் மட்டுமல்லாமல் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் இத்தகைய சூழலை உருவாக்கி உள்ளன. இந்த கோபம், வெறுப்பான சூழல் என்பது இந்தியாவுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் எதிரானது'' என்றார்.
முட்டாள் தனமானது
மேலும் ஜூன் 24ல் எஸ்எப்ஐ அமைப்பினர் சார்பில் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலம் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இதுபற்றி ராகுல்காந்தி கூறுகையில், ‛‛வயநாட்டு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது துர்திர்ஷ்டவசமானது. இது எனது அலுவலகம் அல்ல. இது வயநாட்டு மக்களுக்கு சொந்தமானது. இந்த தாக்குதல் என்பது முட்டாள்தனமானது. பொறுப்பற்ற முறையில் நடத்து கொண்டுள்ளனர்'' என்றார்.