இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி! கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத பாத்திமா பீவி!
திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான ஃபாத்திமா பீவி இன்று காலமான நிலையில் அவர் குறித்த பின்னணியை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் 1927ஆம் ஆண்டு மீரா சாஹிப் -கதீஜா பீவி தம்பதிக்கு முதல் குழந்தையாக பிறந்தவர் ஃபாத்திமா பீவி. இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். வீட்டில் மூத்த பிள்ளையான ஃபாத்திமா பீவி படிப்பில் கெட்டிக்காரர். பத்தினம்திட்டாவில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஃபாத்திமா பீவி திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேதியியல் படித்தார். அதைத் தொடர்ந்து முதுகலையும் வேதியியல் படிக்கவே விரும்பினார் ஃபாத்திமா பீவி.

இந்நிலையில் சார் பதிவாளராக பணியாற்றிய ஃபாத்திமா பீவியின் தந்தை மீரா சாஹிப், தனது மகளை வழக்கறிஞராக்க விரும்பி சட்டம் பயிலுமாறு கூறினார். ஆனால் அதற்கு வீட்டில் உள்ள ஃபாத்திமா பீவியின் தாய் உட்பட உறவினர்கள், பெண் பிள்ளை வக்கீலுக்கு படித்து என்ன செய்யப் போகிறது என ஆட்சேபனை தெரிவித்தார்கள். அதற்கெல்லாம் அசராத பாத்திமா பீவியின் தந்தை, தனது மகளை அந்தக் காலத்திலேயே திருவனந்தபுரத்தில் விடுதியில் சேர்த்துவிட்டு சட்டம் படிக்க வைத்தார்.
தனது தந்தையின் ஆசைப்படி வழக்கறிஞருக்கு படித்த பாத்திமா பீவி 1950ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக் பதிவு செய்துவிட்டு கொல்லம் நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்யத் தொடங்கிவிட்டார். அபோது பெண் வழக்கறிஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை தான் இருந்தது. இதனிடையே அவரது தந்தைக்கு மகளை நீதிபதியாக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து 1958ஆம் ஆண்டு நீதித்துறை தேர்வு மூலம் முனிசிஃப் நீதிபதியான பாத்திமா பீவி அதன் மூலம் அடுத்தடுத்த உயரங்களை தொட ஆரம்பித்தார்.
மாவட்ட நீதிபதி உட்பட பல பதவிகளை வகித்த பாத்திமா பீவி கடந்த 1983ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பாத்திமா பீவி, இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக 1989ஆம் ஆண்டு பதவியேற்றவர் 1992ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக செயல்பட்டார்.
அதன் பின்னர் 1997 முதல் 2001 வரை தமிழக ஆளுநராக பதவி வகித்த பாத்திமா பீவி, ஜெயிலுக்கு போன ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததால் சர்ச்சையில் சிக்கி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கேரளா திரும்பினார். அதன் பிறகு பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த பாத்திமா பீவி வீட்டில் முழு நேர ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பாத்திமா பீவி திருமணம் செய்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications