அதிகாலையில் திறக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை.. முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்
திருவனந்தபுரம்; முல்லைப் பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுவதாகவும் நீர் திறப்பது தொடர்பாகக் கேரள அரசுக்குத் தமிழக அரசு முனகூட்டிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்,
நாட்டின் பழமையான அணைகளில் ஒன்று முல்லைப்பெரியாறு அணை. கேரளாவில் இந்த மழைக் காலத்தில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் உள்ள போதிலும், அந்த அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அணையில் இருந்து நீரைத் திறக்கும் முடிவைத் தமிழக அரசு அதிகாரிகளே எடுத்து வருகின்றனர்.
உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கம் போலி கட்சி அறிக்கை வெளியீடு: அதிமுக மாஜி நிர்வாகி கைது
கேரள முதல்வர் கடிதம்
இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுவதாகவும் நீர் திறப்பது தொடர்பாகக் கேரள அரசுக்குத் தமிழக அரசு முனகூட்டிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார், கடந்த 3 நாட்களில் 2 முறை அணையில் இருந்து உபரி நீரைத் தமிழக அரசு திறந்துவிட்டுள்ளதால் கேரள மக்கள் கவலை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 முறை
கடந்த நவம்பர் 30ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 5,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை (டிச.2) 8,017 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இரண்டு முறையும் போதிய முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து நீர் திறந்துவிட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா நிலைப்பாடு
இது தொடர்பாக பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், "முன்னறிவிப்பு இல்லாமல் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்க வேண்டும். அதேநேரம் கேரளா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அணையில் இருந்து நீரைத் திறக்க திட்டமிட்டால், அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய எச்சரிக்கையை வழங்க வேண்டும். அதன் பின்னரே அணையில் இருந்து நீரைத் திறக்க வேண்டும்.
அதிகாலை நேரத்தில்
முன் எச்சரிக்கை இல்லாமல், இரவு நேரங்களில் அணையைத் திறப்பது தேவையற்ற பீதியையும் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, முல்லைப் பெரியாறு அணையின் இரண்டு ஷட்டர்கள் இன்று (டிசம்பர் 2, 2021) அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டன. 6,413 கன அடி நீர் திறக்கும் முன்பு போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதன் பிறகு அதிகாலை 4 மணிக்கு 10 ஷட்டர்களும் திறக்கப்பட்டு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 8,017 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
முதல்வர் தலையிட வேண்டும்
இப்படி முல்லைப் பெரியாறு அணையை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் திறந்துவிட்டதால் பல பகுதிகளில் வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் நேரங்களில் மட்டுமே முல்லைப் பெரியாறு அணை திறந்துவிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.