10 வயது சிறுமி என கூட பார்க்கல.. 2 ஆண்டு கொடூர பலாத்காரம் செய்த உறவினருக்கு.. 142 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரம்: மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பாலியல் குற்றங்கள் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பலாத்கார சம்பவங்கள்
பெரும்பாலும் மைனர் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்கள் மூலமே இதுபோன்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுவதாகப் பல ஆய்வுகளில் தெரிய வந்து உள்ளது. வெளியே கூற மாட்டார்கள் என்ற துணிச்சலில் தான் மனித மிருகங்கள் மைனர் குழந்தைகளிடம் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவோர் துணிச்சலாகப் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிப்பவர்களின் பெயரைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகளை ஏற்படுத்தி உள்ளன.

தண்டனை
இந்தச் சூழலில் அண்டை மாநிலமான கேரளாவில் 10 வயது மைனர் சிறுமியை சுமார் இரண்டு ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு அங்குள்ள போக்சோ நீதிமன்றம் மிகக் கடுமையான தண்டனையை வழங்கி உள்ளது. மைனர் சிறுமியை 2 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த அந்த 41 வயது நபருக்கு 142 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பைப் பிறப்பித்து உள்ளது.

குற்றவாளி
மேலும், குற்றவாளி அபராத தொகையைச் செலுத்தவில்லை என்றால், அவர் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்பில் கூறப்பட்டு உள்ளது. அங்கு போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை இதுவாகும். இந்த கொடூர காரியத்தைப் புரிந்த குற்றவாளி ஆனந்தன் பி ஆர் எனப்படும் பாபு ஆகும்.

இரண்டு ஆண்டுகளாக
அந்த நபர் கடந்த 2019 முதல் 2021 வரை அந்த 10 வயது சிறுமியைப் பல முறை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை பாலியல் ரீதியான அத்துமீறலிலும் ஈடுபட்டு இருக்கிறான். இந்த வழக்கில் மார்ச் 20, 2021இல் திருவல்லா காவல்துறை அவன் மீது வழக்குப் பதிவு செய்தது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர், குற்றவாளி பாபுவின் உறவினர் தான். மேலும், அவர்களுடன் ஒரே வீட்டில் தான் பாபு வசித்து வந்துள்ளார்.

போலீசார் தகவல்
இது குறித்து பத்தனம்திட்டா போலீசார் கூறுகையில், "அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறப்பாக வாதாடினார். சாட்சிகள், வாக்குமூலம், மருத்துவ பதிவுகள், என அனைத்தும் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. 10 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த அந்த கொடூரனுக்கு மொத்தம் 142 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற கடுமையான தீர்ப்புகளை வழங்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications