டார்கெட்டை முடிக்காததால்.. ஊழியரை நாய் போல் இழுத்து சென்று அரை நிர்வாணப்படுத்திய கேரளா நிறுவனம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்க்கெட்டை முடிக்காததால் ஊழியரின் கழுத்தி்ல் கயிற்றை கட்டி நாய்போல் இழுத்து சென்றதோடு, அரை நிர்வாணப்படு்த்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பரவி வருகிறது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தனியார் நிறுவனங்களில் பலவும் நாள், வாரம், மாதம், ஆண்டு என்று டார்க்கெட் வைத்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த டார்க்கெட் என்பது தனித்தனியே கொடுக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு ஊழியர்களும் டார்க்கெட்டின் பின்னால் ஓட வேண்டி உள்ளது. எப்படியாவது டார்க்கெட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
ஆனாலும் கூட சில வேளைகளில் டார்க்கெட் என்பது எட்ட முடியாத நிலை ஏற்படும். இப்படியான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் கேரளாவில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்க்கெட்டை முடிக்காத ஊழியருக்கு நூதன தண்டனைகள் என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதாவது கேரளா மாநிலம் கொச்சியில் தனியாருக்கு சொந்தமான மார்க்கெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே டார்க்கெட் உள்ளது. ஆனால் ஊழியர் ஒருவர் தனக்கான டார்க்கெட்டை முடிக்கவில்லை. இதையடுத்து அந்த ஊழியரின் கழுத்தில் கயிறு போட்டு கட்டி நாய்போல முழங்கால்போட்டு நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பிற ஊழியர்களின் முன்னிலையில் நடந்துள்ளது.
இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதேபோல் இன்னும் சில ஊழியர்கள் அரை நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளனர். ஊழியர்களை அரை நிர்வாணமாக நிற்கும்படி அங்கிருந்தவர்கள் கட்டாயப்படுத்தும் வீடியோவும் வெளியாகி உள்ளது. கேரளா தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இந்த செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு என்பது கிளம்பி உள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த கேரளா தொழிலாளர் நலத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறுகையில், ‛‛இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சம்பவத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது. சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை வழங்கும்படி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.
மேலும் வழக்கறிஞர் குளத்தூர் ஜெய்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தது. மேலும் கேரள மாநில இளைஞர் ஆணையமும் தலையிட்டு, துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக தானாக வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக எஸ்பி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு காவல்துறை சார்பில், ‛‛நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு வழங்கும் பயிற்சி என்பது வழங்கப்பட்டது. பயிற்சியின் ஒருபகுதியாக தான் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் மேலாளர்ஒருவருக்கும், நிறுவன உரிமையாளருடன் பிரச்சனை என்பது இருந்தது. அவர் மூலமாக இந்த வீடியோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 4 மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்டது. தற்போது அந்த மேலாளர் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்'' என்று கூறியுள்ளனர். ஆனால் இதனை பலரும் ஏற்கவில்லை. காவல்துறை அந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இதுபற்றி அங்கு பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ‛‛நான் இன்னும் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை.மேனேஜராக இருந்தவர் வலுக்கட்டாயமாக இந்த வீடியோவை எடுத்தார். அதன்பிறகு அவர் பணியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் எடுத்த அந்த வீடியோ தான் தற்போது நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்துகிறது'' என்றார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications