கேரள லாட்டரி பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இனி கோடிகளில் பரிசு மழை.. ஆனால் அங்க தான் சிக்கலே இருக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையினை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 70 லட்சம் மற்றும் 80 லட்சம் ரூபாய் முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளின் பரிசுத்தொகை இனிமேல் ஒரு கோடி ரூபாய் என்று மாற்ற முடிவு செய்துள்ளது. இதேபோல் ரூ.40 க்கு விற்கப்பட்ட ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலையானது இனிமேல் 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அங்கு ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பல கோடி ரூபாய் முதல் பரிசாக அளிக்கப்படுகிறது. ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது.

கேரள லாட்டரி டிக்கெட்டுகள்
அதேபோல கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், பூஜா பம்பர் என மொத்தம் ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பம்பர் லாட்டரிகள் மட்டும் இன்றி கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை 40 ரூபாய் ஆகும். அதாவது வின் வின் (திங்கள் கிழமை), ஸ்ரீசக்தி (செவ்வாய்க்கிழமை), ஃபிப்டி ஃபிப்டி (புதன்கிழமை), காருண்யா பிளஸ் (வியாழக்கிழமை), நிர்மல் (வெள்ளிக்கிழமை), காருண்யா (சனிக்கிழமை) மற்றும் அக்ஷயா (ஞாயிற்றுக்கிழமை) என வாரத்திற்கு ஏழு நாட்களும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட்டுகளை தவிர இதர டிக்கெட்டுகளின் விலை ரூ.40 ஆகும். தினமும் 1.08 கோடி லாட்டரி டிக்கெட்டுகளை கேரள அரசு அச்சிடுகிறது. எனினும், அடிக்கடி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். இதற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் 80 லட்சம் முதல் 90 லட்சம் அச்சிடப்படுகின்றன.
லாட்டரி டிக்கெட்டின் விலையை உயர்த்த முடிவு
குறைவாகவே அச்சிடப்பட்டாலும் இந்த டிக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இல்லை. இதனால், தட்டுப்பாட்டை போக்கும் விதமாக லாட்டரி டிக்கெட்டுகளின் விலையை ரூ.40ல் இருந்து 50 ஆக உயர்த்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 2 வது வாரத்தில் இந்த விலை உயர்வை அமல்படுத்துவது தொடர்பாக கேரள அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கேரள அரசு வருவாயை பெருக்கும் விதமாகவே இந்த விலை உயர்வை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் இதனால், லாட்டரி விற்பனை பெருமளவில் சரியும் என்றும் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
எனினும் லாட்டரி பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய வகையில் பரிசுத் தொகையையும் கேரள அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. தினமும் 40 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த லாட்டரிகளின் பரிசுத்தொகை 70 லட்சம் மற்றும் 80 லட்சம் முதல் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத்தொகையும் உயரப்போகிறது. அதாவது இனிமேல் 1 கோடி முதல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று லாட்டரி பரிசுத்தொகையும் கூடுகிறது. அதாவது, குறைந்தபட்சமாக வழங்கப்படும் 50 ரூபாய் பரிசுத் தொகையினை 100 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் பேருக்கு பரிசுத்தொகை கிடைக்கும் வகையில், மாற்றங்களையும் கொண்டு வரப்பட உள்ளது. பரிசுத்தொகையை 70-80 லட்சம் என இருப்பதை ஒரு கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது என்று கூறியிருந்தாலும் கூட, விலையை உயர்த்தினால் பலரும் லாட்டரி வாங்குவதை தவிர்த்து விடுவார்கள் எனவும் இதனால், சாலையோர லாட்டரி வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதே லாட்டரி விற்பனையாளர்கள் முன்வைக்கும் வாதமாக உள்ளது.
போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு
ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்ற அனூப் தற்போது திருவனந்தபுரத்தில் லாட்டரி கடை நடத்தி வருகிறார். லாட்டரி டிக்கெட்டுகள் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பது குறித்து அனூப் கூறுகையில், "கேரள அரசின் இந்த முடிவு பெரிய ஏஜென்சிகளை பாதிக்காது. ஆனால், சிறு வியாபாரிகளை அதிகம் பாதிக்கும்." என்றார். கேரள அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவும் லாட்டரி விற்பனையாளர்கள் யூனியன் தயாராகி வருவதாக அதன் தலைவர் பிலிப் ஜோஷப் கூறியுள்ளார்.
கமிஷன் தொகையையும் அதிகரிக்க வேண்டும்
லாட்டரி விற்பனை அதிகரித்து இருப்பதான் காரணமாகவே டிக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் சில வியாபாரிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பாக 10-20 லாட்டரி விற்பனையானர்கள் இருந்த இடத்தில், தற்போது 60-70 விற்பனையாளர்கள் உள்ளனர் எனவும், விலை கூட்டினாலும் கமிஷன் தொகையை 12 சதவீதமாக நீடிக்க வேண்டும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல டிக்கெட்டுகள் விலை உயர்த்தும் போது துவக்கத்தில் கொஞ்சம் விற்பனை மந்தமாகும் எனவும் ஆனால், சில நாட்களில் விற்பனை சூடுபிடித்துவிடும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதனால், தற்போது கேரளாவில் லாட்டரி பிரியர்கள் இடையே டிக்கெட்டுகள் விலை உயர்வு தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து இருக்கிறது.
13 மாநிலங்களில் லாட்டரி விற்பனை
இந்தியாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி இருக்கும் 13 மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், கோவா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் என 13 மாநிலங்களில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்ச பரிசுத்தொகையை கேரள லாட்டரிகள் வழங்குகின்றன.
இதனால், கேரள லாட்டரி டிக்கெட்டுகள் என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. லாட்டரிகளால் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை இருந்தாலும், என்றாவது ஒரு நாள் நமக்கு அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்று பலரும் டிக்கெட்டுகளை வாங்கி வாங்கி பணத்தை இழந்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டே தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications