கேரளா வயநாடு நிலச்சரிவு- ராணுவத்தை அனுப்ப கேரளா கோரிக்கை- களமிறங்கும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள்!
திருவனந்தபுரம்: கேரளா வயநாடு சூரல்மலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி உள்ளன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு கேரளா மாநில அரசு, ராணுவ உதவியை கோரியுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாட்டின் உதகை வெலிங்டன் தளத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் நேற்று காலை முதலே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அப்பகுதியில் இடைவிடாமல் கனமழை பெய்து காட்டாறுகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் இன்று அதிகாலை 2 முறை சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின. இந்த வீடுகளில் சிக்கிய 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் கேரளா மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே நிலச்சரிவு மீட்புப் பணிக்கு ராணுவத்தினரை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேரளா மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில் தமிழ்நாட்டின் உதகையில் இருந்து மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள் குழு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக தமிழ்நாட்டின் கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக வயநாடு பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கியது.
சூரல்மலை பகுதியில் மிக முக்கியமான தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலைமை உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தற்காலிக பாலத்தை அமைத்தும் வருகின்றனர்.
மேலும் வயநாடு நிலச்சரிவு பகுதியில் மீட்பு பணிகளை முடுக்கிவிடவும் மேற்பார்வையிடவும் மாநில அமைச்சர்கள் அடுத்தடுத்து அங்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே நிலச்சரிவு அபாயம் தொடர்பாக தொடர்ந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்ததால் பலர் முகாம்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதனால் உயிர் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 8086010833, 9656938689 ஆகியவை உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications